10 ஆயிரம் கிராமங்களில் பொதுக்கூட்டம்.. தவெக தலைவர் விஜய் போட்ட உத்தரவு.. பொறுப்பை ஏற்ற நிர்வாகி!
சென்னை: திமுக, அதிமுகவை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான பொறுப்பை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த வசம் ஒப்படைத்திருக்கிறார். தேர்தலுக்கான அடித்தளமாக இந்த பிரச்சார கூட்டம் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக சார்பாக ஓரணியில் தமிழ்நாடு என்று வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 7 முதல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தவெக அடுத்தக்கட்ட திட்டம்
இந்த முறை நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி இருப்பதால், தேர்தல் களம் கூடுதல் சூடுபிடித்துள்ளது. தவெக தலைவர் விஜய் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் என்னதான் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், உள்ளூர் நிர்வாகிகள் பிரபலமடைந்து பணியாற்றினால் தான் வெற்றி பெற முடியும்.
விஜய் செயல்பாடுகள்
இதனை விஜய் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார். விஜயின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. நேற்று கூட காவலர்களின் தாக்குதலால் உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதுவும் அவரின் வருகையை முன் கூட்டியே அறிவிக்காமல் தனது பாணியில் சைலண்ட் விசிட் கொடுத்தார்.
10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம்
இது மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதேபோல் தவெக கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கிராமங்களில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தவெகவில் மொத்தமாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி மீது விமர்சனம்
அதன்படி மொத்தமாக 10 மண்டலமாக பிரித்து நகரங்கள், கிராமங்கள் என்று முக்கிய பகுதிகளில் பொதுக்கூட்டம், தெருமுனை பிரச்சாரம், கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொறுப்பை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வசம் விஜய் ஒப்படைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சி மீதான விமர்சனங்கள், தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் குறித்து பேசப்பட உள்ளது.
நாளை செயற்குழு கூட்டம்
தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு சென்று மக்களை சந்திக்காமல் இப்போதே மக்களை சந்திக்க வேண்டும் என்பதால் விஜய் இந்த திட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். இது தவெக நிர்வாகிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் நல்ல அடித்தளமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. நாளை தவெக செயற்குழு கூட்டம் நடக்க உள்ள நிலையில், அடுத்தக் கட்ட முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications