மலையாளிகளுக்கு நன்றி இல்லை; என்னென்ன அவர்களுக்கு கொடுக்கிறோம் தெரியுமா? வேல்முருகன் பாய்ச்சல்..!
சென்னை: இறைச்சி, காய்கறிகள், பழங்கள், முட்டைகள், பால், மின்சாரம் என பலவற்றிலும் தமிழகத்தை சார்ந்திருக்கக் கூடிய கேரளக்காரர்கள், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நன்றி உணர்ச்சியின்றி இருப்பதாக த.வா.க. தலைவர் வேல்முருகன் விமர்சித்திருக்கிறார்.
இந்திய தேசியம் பேசும் காங்கிரசும் -பாஜகவும், சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், கேரள மக்களிடையே பிளவைத் தூண்டி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க முயல்வதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள காட்டமான அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சதித்திட்டம்
முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிடும் சதி திட்டத்தை மூடி மறைத்து புதிய அணை கட்டப் போவதாக கூறும் கேரள அரசின் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாடு அரசு துணைபோகக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் அல்லது முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் அல்லது முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும். இது தான் கேரளா அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த நிலைப்பாடு.

காங்கிரஸ்-கம்யூனிஸ்ட்
குறிப்பாக, இந்திய தேசியம் பேசும் காங்கிரஸ், பாஜக, சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள், கேரள மக்களிடையே இனவெறியைத் தூண்டி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க முயலுகிறது. முல்லைப்பெரியாறு விவகாரத்தில், அணை வலுவாக உள்ளதால் 142 அடிவரை நீரைத் தேக்கலாம், பின்னர் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது. ஆனால், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பானதல்ல என பொய் பரப்புரை தொடர்ந்து மேற்கொண்டு வரும் கேரள அரசு, இது குறித்த அறிக்கை ஒன்றை சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

பேச்சுவார்த்தை வேண்டாம்
இந்த நிலையில் தான், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது குறித்து, அடுத்த மாதம் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் கேரள அரசுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்தைக்கு செல்லக்கூடாது என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்தாகும்.

30 லட்சம் மலையாளிகள்
இது ஒருபுறமிருக்க, சுமார் 30 லட்சம் கேரளாக்காரர்கள் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறார்கள். அவர்களை எங்களின் சகோதரர்களாக தான் பார்க்கிறோம். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்களுக்குரிய உயர் பதவிகளையும், வருமானம் அதிகமுள்ள வணிகங்களையும், தொழில்களையும் கைப்பற்றி உள்ளார்கள். தமிழ்நாட்டில் இருந்து அரிசி, கேரளம் முழுவதுக்குமான இறைச்சி, காய்கறிகள், பழங்கள், முட்டைகள், பால் உள்ளிட்டவை கேரளாவுக்கு போகின்றன.

நன்றி இல்லை
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மின்சாரம் ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட். இத்தனை வழிகளில் கேரளம் தமிழ்நாட்டைச் சார்ந்து இருக்கிறது. ஆனால் இதற்கான நன்றி உணர்ச்சி எதுவும் கேரளாக்காரர்களிடம் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications