டிசி கேட்டது குத்தமா? கோவை சட்டக்கல்லூரியின் அலட்சியம்.. மாணவி, கணவர் சஸ்பெண்ட் -வேல்முருகன் கண்டனம்
மாற்று சான்றிதழ் கேட்டு போராடிய மாணவர்களை சஸ்பெண்ட் செய்த கோவை சட்டக்கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை: டிசி கேட்டு போராடிய கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், மாணவர்கள் மீது அத்துமீறி நடந்துகொண்ட கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்து இருக்கும் அறிக்கையில், "கோவை சட்டக் கல்லூரியில் கடந்த 2022 மே மாதம், மாணவி ஹரிதா எல்.எல்.பி சட்டப்படிப்பு முடித்த நிலையில், மாற்று சான்றிதழ் வாங்க கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், கல்லூரி அலுவலக பணியாளர்கள் சம்பத், உதவியாளர் காளிமுத்து ஆகியோர் தங்களின் கவனக்குறைவால், மாணவி ஹரிதாவின் விண்ணப்பத்தை தொலைத்து விட்டு, அவரை அலைக்கழித்து உள்ளனர்.

மிரட்டிய கல்லூரி நிர்வாகம்
மேலும், அதே கல்லூரியில், பி.ஏ எல்.எல்.பி படித்து வரும் ஹரிதாவின் கணவர் ஷேக் முகம்மதையும், கல்லூரி நிர்வாகம் மிரட்டியுள்ளது. கல்வியை போதித்து, மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பை கற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு சட்டக்கல்லூரி நிர்வாகம், தவறுக்கு காரணமான கல்லூரி அலுவலக பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, மாணவி ஹரிதாவையும், அவரது கணவர் ஷேக் முகம்மதையும் அலைக்கழிக்க வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாக கண்டிக்கதக்கது.

இழிவாக பேச்சு
14.9.2022 அன்று, மாணவி ஹரிதா அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்று சான்றிதழ் தொடர்பாக, கல்லூரிக்கு சென்ற ஷேக் முகம்மதுவை, அலுவலக பணியாளர்கள் இழிவாக பேசியுள்ளனர். இதனால், ஷேக் முகம்மது, சட்டக் கல்லூரி இயக்குனர், முதலமைச்சர் பிரிவு, தலைமை செயலாளர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு புகார் அளித்துள்ளார்.

மாணவர் மீது புகார்
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சட்டக் கல்லூரி முதல்வர், மேலாளர் மூலமாக, ஷேக் முகம்மது மீது புகார் அளிக்க வைத்துள்ளார். அதன்படி விசாரணை என்ற பெயரில், ஷேக் முகம்மது ஐந்து முறைக்கு மேல் அலைக்கழிக்கப்பட்டு உள்ளார். கல்லூரியில் பயிலும் மாணவர்கள், தங்களது குறைகளை சுட்டிக்காட்டி புகார் அளித்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்லூரி முதல்வர், அதனை விடுத்து, மேலாளர் மூலம் பழிவாங்க துடிப்பது, கல்லூரி முதல்வருக்கு அழகல்ல.

கல்லூரி முதல்வர் மிரட்டல்
17.11.2022 அன்று, மாணவி ஹரிதா முதுகலை பட்டப்படிப்பில், அதே கல்லூரியில் சேர்ந்த நிலையில், அவரையும், அவரது கணவர் ஷேக் முகம்மதுவையும், கல்லூரி முதல்வர் மிரட்டியுள்ளார். அதோடு, அவர்கள் இருவரையும் இடைநீக்கம் செய்ததோடு, பழி வாங்கும் நோக்கில் இருவரும் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹரிதா, ஷேக் முகம்மது ஆகிய இருவரும், உடல் ரீதியாகவும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கணவன் மனைவி போராட்டம்
மாணவி ஹரிதா, ஷேக் முகம்மதுக்கு நியாயம் கோரி, கோவை சட்டக் கல்லூரி முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, மாணவி, ஹரிதா, ஷேக் முகம்மது ஆகிய இருவர் மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும், இவ்விவகாரத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய கல்லூரி முதல்வர், கவனக்குறைவாக செயல்பட்ட கல்லூரி அலுவலக பணியாளர்கள் மீது மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது." என்று வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications