ஸ்டாலின் தான் இதைச் செய்ய வேண்டும்! வேறு ஆளில்லை! வேல்முருகன் வைக்கும் வேண்டுகோள்!
சென்னை: சங் பரிவாரின் அடுத்த இலக்கு தமிழகமாக கூட இருக்கலாம் என எச்சரித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மோடி அரசுக்கு எதிராக ஒற்றை கருத்துள்ள மாநிலங்களை ஒன்று திரட்ட வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
மதச்சார்பின்மை என்ற இந்தியாவின் அஸ்திவாரத்தை இடித்து நொறுக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக,சங்கப் பரிவாரங்கள் களம் இறங்கியுள்ளதாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மதச்சார்பின்மை
மதச்சார்பின்மைதான் இந்தியாவின் அஸ்திவாரம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அஸ்திவாரமும் அதுதான். ஆனால், அந்த அஸ்திவாரத்தை இடித்து நொறுக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக,சங்கப் பரிவாரங்கள் களம் இறங்கியுள்ளனர்.குஜராத்தில் அம்மாநில அரசால் இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதல்களைப் போன்று, கர்நாடகத்திலும் அதற்கான வேலைகளில், ஆர்.எஸ்.எஸ், பாஜக,சங்கப் பரிவாரங்கள் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்
அதன் முன்னோட்டம் தான், கர்நாடகாவில் ஆறு கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிப்பு. ஹிஜாப் அணிந்து வந்த இசுலாமிய மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதி மறுப்பு. ஹிஜாபுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்கப் பரிவாரங்கள் மாணவர்களிடம் மதவெறி வன்முறை தூண்டுதல் என அனைத்து நடவடிக்கையுமே.

சங்ப் பரிவாரங்கள்
ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்ப் பரிவாரங்கள் வன்முறை என்பது, கர்நாடகாவோடு நிற்பதில்லை, தமிழ்நாடு, கேரளா என அடுத்தடுத்து மாநிலங்களில் தொடரும். அதுவே, ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களின் இலக்கு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, இந்துக்கள் திருநீறு பூசிக் கொள்ளவும், சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து கொள்ளவும், கிறித்தவர்கள் சிலுவை அணிந்து கொள்ளவும், அனுமதிக்கிறது. அதன் நீட்சியாகவே ஹிஜாப் அணியும் முறையும் இருக்கிறது.

ஜனநாயக சக்திகள்
ஆனால், இதனையெல்லாம் புரிந்து கொள்ளாத அல்லது அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத, சங்கப் பரிவார கும்பல்களின், இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாதென்று, நடத்திவரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும். ஏனென்றால், சங்கப் பரிவார கும்பல்களின் அடுத்த இலக்கு தமிழ்நாடாக இருக்கலாம்.

மத நல்லிணக்கம்
எனவே, மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் ஜனநாயக நடைமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கும் மோடியின் கும்பலை தூக்கி எரிய, ஒற்றை கருத்துள்ள மாநிலங்களை ஒன்று திரட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு உள்ளது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.












Click it and Unblock the Notifications