ரிப்போர்ட்டர் கேள்வியால் தெறித்த புஸ்ஸி ஆனந்த்.. கைது என்றதும் சந்தில் புகுந்து ஓடிய தவெக தொண்டர்கள்
சென்னை: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசால் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் வக்பு வாரிய மசோதாவை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் பொது செயலாளர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது., அப்போது வக்பு வாரியத்தால் எதாவது ஒரு பிரச்சனையை சொல்லுங்கள் என பாஜக கேட்கிறது என செய்தியாளர் கேள்வி எழுப்ப, உங்களுக்கு எது சிறந்த சட்டமோ அந்த சட்டத்தை வைத்து பேசிக் கொள்ளுங்கள் என்பது போல புஸ்ஸி ஆனந்த் மழுப்பலாக பதில் அளித்துவிட்டு அங்கிருந்து அவசரமாக கிளம்பினார்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று இரவு மாநிலங்களவையில் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் எதிராக 95 வாக்குகளும் பதிவானது. இதனை தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை தவிர்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயக அவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா பற்றி விவாதிக்க போதுமான இஸ்லாமியர் உறுப்பினர்கள் இல்லை. இதுதான் பாஜக அரசு நிறுவியுள்ள மிக மோசமான பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் மசோதாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் விஜய் கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் 200க்கும் மேற்பட்டோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய புஸ்ஸி ஆனந்த்," இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கும். தலைவர் விஜய் எப்போதும் இஸ்லாமிய மக்களுடன் இருப்பேன் என உறுதி அளித்திருக்கிறார். இந்த சட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என இஸ்லாமியர்கள் அச்சமாக இருக்கின்றனர். அவர்களின் அச்சம் குறித்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு தெரியும். அந்த மசோதா கொண்டுவரப்பட்டதன் காரணமாக இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்" என கூறினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் வக்பு வாரிய திருத்த மசோதா எந்த இடத்தில் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என பாஜக கேட்கிறதே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த புஸ்ஸி ஆனந்த்," அந்த சட்டம் குறித்து இஸ்லாமிய மக்களுக்கு தெரியும். அதனால் தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். என்றார்.
இடையில் மறித்து பேசிய செய்தியாளர் எந்த ஷரத்து வக்பு வாரிய மசோதாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது என கூறுங்கள் என திரும்பவும் கேட்க இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை இருப்பதால்தான் அவர்கள் போராடுகிறார்கள், அதனால் தான் தமிழக வெற்றிக் கழகமும் போராடுகிறது. உங்கள் சொத்தில் இன்னொருவர் உட்கார்ந்து கொண்டால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா. அதுபோலதான் வக்பு வாரிய மசோதா இருக்கிறது. மசோதாவில் பிரச்சனை இருக்கிறது என திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிவிட்டு கிளம்பினார்.
ஒரு படத்தில் வடிவேலு நீதிபதியை பார்த்து," எந்த சட்டம் சிறந்த சட்டமோ அதை பார்த்து நீங்கள் தீர்ப்பு சொல்லுங்கள் எனக் கூறுவது போல புஸ்ஸி ஆனந்த்தின் பேச்சு இருக்கிறது என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்திருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பல்வேறு இடங்களில் தமிழக வெற்றிக்கழகத்தினருக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வகையில் சென்னை அமைந்தகரையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்ற நிலையில் அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை பாயும் என எச்சரித்தனர். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து அங்கிருந்து தப்பி சென்றது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications