தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்
சென்னை: சென்னை வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று இரவு ஆதவ் அர்ஜுனா பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது பெண் தொண்டர்கள் மீது உடைந்த மதுபாட்டில் வீசப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 2 பேரை போலீசார் பிடித்து சென்றபோது சம்பவம் பற்றி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆதவ் அர்ஜுனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் பகுதியில் இன்று பொதுக்கூட்டம் நடந்தது.

வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தவெகவின் நாஞ்சில் சம்பத் மேடையில் பேசி கொண்டிருந்தார். இந்த வேளையில் தான் அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
மதுபாட்டில் வீச்சு
அதாவது திடீரென்று தவெக பெண் தொண்டர்கள் மீது உடைந்த மதுபாட்டில் வீசப்பட்டது. அதோடு உடைந்த கண்ணாடி துண்டுகளும் பெண் தொண்டர்கள் மீது விழுந்தது. இதனால் பெண் தொண்டர்கள் பதறிப்போயினர். உடனடியாக அவர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதவ் அர்ஜுனாவிடம் புகார் தெரிவித்தனர்.
ஆதவ் அர்ஜுனா எதிர்ப்பு
இதையடுத்து ஆதவ் அர்ஜுனா, ''எங்கள் கூட்டத்தில் பெண்மணிகள் இருக்கக்கூடிய ஏரியாவில் கண்ணாடி பாட்டில் வைத்து அடித்து கொண்டு இருக்கிறார்கள். பாட்டில் கொண்டு அடித்துள்ளார்கள். பாட்டிலை உடைத்து தூளாக்கி பெண்மணியின் தோளில் அடித்து உள்ளார்கள். காவல்துறை இதை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இதே இடத்தில் உட்காருவோம். கிளம்ப மாட்டோம். அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது? கண்ணாடி பாட்டில் வைத்து அடிப்பது தான் ஜனநாயகமா?'' என்று கேள்வி எழுப்பினார்.
சிக்கிய 2 பேர்
இதற்கிடையே தான் முக்கிய தகவல் கிடைத்தது. பொதுக்கூட்டம் நடந்த இடத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. அந்த தங்கும் விடுதியில் இருந்து தான் பாட்டில் வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதோடு 2 பேரை பிடித்து சென்றனர். அவர்களிடம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போலீஸ் தந்த விளக்கம்
இதுபற்றி போலீசார் கூறுகையில், '' சென்னை அயனாவரத்தில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே லாட்ஜ் உள்ளது. அந்த லாட்ஜில் மதுபோதையில் இருந்த இருவர் சண்டையிட்டு கெண்டனர். அப்போது அவர்கள் மாறிமாறி மதுப்பாட்டில்களை வீசி கொண்டனர். இந்த சமயத்தில் தவறுதலாக பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்தது. பிடிபட்ட 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications