புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி.. நாளை விஜய் வெளியிடப்போகும் அறிவிப்பு.. பரபரக்கும் பனையூர்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதற்காக பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கூடுதலாக சில புதிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. திமுக தரப்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய் இதுவரை களத்திற்கே வரவில்லை. முதல்முறையாக அவர் தலைமையில் நடந்த போராட்டத்தில் கூட 3 நிமிடங்கள் மட்டுமே பேசினார். இன்னும் ஒவ்வொரு சாலையாக, தெருவாகச் சென்று விஜய் மக்களைச் சந்திக்கத் தொடங்கவில்லை. இதனிடையே தவெக சார்பாக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்குப் பின் தொகுதி வாரியாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தவெக நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தவெக சார்பாக நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது.
அதாவது தவெக சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே தவெக தொடங்கப்பட்ட போதே செயலி ஒன்றை விஜய் அறிமுகப்படுத்தி இருந்தார். அந்த செயலியின் அடிப்படையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் தவெகவில் இணைந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் விஜய் தீவிரப்படுத்தி இருக்கிறார். இந்த புதிய செயலி மூலமாக நிர்வாகிகள் செய்யும் பணிகளையும் கண்டறிய முடியும் என்று சொல்லப்படுகிறது. கடந்த வாரமே பனையூர் அலுவலகத்தில் இந்த செயலி அறிமுகம் செய்வதாக இருந்தது.
ஆனால் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். புதிய செயலி அறிமுகம் செய்யப்படுவதோடு, நிர்வாகிகளுக்கு இன்னும் சில உத்தரவுகளையும் விஜய் பிறப்பிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications