பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.5000.. நாளை முதல் பணியை தொடங்கும் தவெக! வெளியான அப்டேட்
சென்னை: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியும் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி தலைவருமான மரிய வில்சன் அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் நாளை முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
தவெக தலைவர் விஜய் வேலுச்சாமிபுரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் கடும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து உயிரிழந்த குடும்பங்களுக்க ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்திருந்தார். தற்போது வரை நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. விஜய் பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைப்பேசியில் மட்டுமே ஆறுதல் தெரிவித்திருந்தார். விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காதது விமர்சனமாக இருந்து வரும் நிலையில், நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தொடங்கியுள்ளனர்.
அதேபோல தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியையும் கட்சியினர் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என மரிய வில்சன் அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் நாளை முதல் தொடங்கும் என அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில்,

"நாங்கள் அறிவித்தபடி, கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டான பலன் சென்று சேரவேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறேன். அக்குழு நாளை அவர்களை சந்திக்கிறது. ஏற்கனவே நான் அறிவித்தபடி, கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கிடவும். ஆயுள் காப்பீடு செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி 5,000/- ரூபாயை ஒவ்வொரு மாதமும், பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்/தலைவியின் வாழ்நாள் முழுக்க வழங்க இருக்கிறேன். நாளைமுதல் என் குழு செயற்பாட்டை ஆரம்பிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications