அதிமுக + தவெக.. விஜய்க்கு ஆதரவாக வந்த எடப்பாடி.. கடைசி நேரத்தில் கூட்டணியில் மாற்றம் வருமா?
சென்னை: கரூர் பெருந்துயர விவகாரத்தில் தவெக மற்றும் விஜய்க்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறி வருகிறார். இதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி - விஜய் இடையிலான சந்திப்பு நடக்கலாம் என்றும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுகவுடன் தவெக கைகோர்க்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் திமுகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இன்னொரு பக்கம் திமுக கூட்டணி கட்சிகள் தவெகவை சாடி வருகின்றன.

குறிப்பாக அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்டக் கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக நிற்பது பல்வேறு தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பாஜக தங்களின் நாடாளுமன்றக் குழுவை கரூருக்கு அனுப்பி விசாரணை நடத்தி இருக்கிறது. அண்ணாமலை தொடங்கி பாஜகவினர் அனைவரும் விஜய்க்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அத்தனை தலைவர்களும் திமுகவை குறை கூறி வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், பிரம்மாண்ட கட்சி ஒன்று நமது கூட்டணிக்கு வருகிறது என்று தெரிவித்தார்.
அந்தப் பிரம்மாண்ட கட்சி யார் என்று நேர்காணல் ஒன்றில் கேட்டதற்கு, தேர்தல் நெருங்கும் போது தெரிய வரும் என்று கூறி சஸ்பென்ஸ் வைத்தார். தற்போது தமிழ்நாட்டில் தவெக வேகமாக வளர்ந்து வந்த நிலையில், அந்தக் கட்சியை தான் எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரா என்ற கேள்விகள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் பாஜகவுடன் கூட்டணியில் இணைவதற்கு முன்பாக அதிமுக - தவெக இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதன் காரணமாகவே தவெகவை அதிமுகவும், அதிமுகவை தவெகவும் விமர்சிக்காமல் அமைதி காத்தன. இதன்பின் பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்ததால், மேம்போக்காக விமர்சிக்கத் தொடங்கினர். தற்போது விஜய்க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், ஒரே எதிரியான திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் அதிமுக கூட்டணிக்குள் தவெக செல்ல வாய்ப்பு உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி வைக்க தவெக தலைவர் விஜய்யும் ஆர்வமாகவே இருந்தார். தற்போது கரூர் விவகாரத்தில் அதிமுக தரப்பில் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்கள் கூறப்பட்டு வருவதால், விரைவில் இரு கட்சிகளுக்கு இடையில் சந்திப்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது. இது டிசம்பர் மாதத்திற்கு பின் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications