SIR.. பாஜகவை லேசாக வருடிவிட்டு.. திமுகவை போட்டு தாக்கிய விஜய்.. இப்படி நிலைப்பாடு எடுத்துட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு (SIR) கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதை ஆதரிக்கும் மத்திய பாஜக அரசை கண்டிக்கும் இந்த அறிக்கையில் விஜய் திமுகவை அதிகமாக விமர்சனம் செய்து இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிக்கையில் திமுக-வை 8 முறையும், பாஜக-வை 2 முறையும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜய். இந்த திட்டத்தை செயல்படுத்துவது தேர்தல் ஆணையம். இந்த திட்டத்திற்கு ஆதரவாக கோர்ட்டில் வாதம் வைப்பது மத்திய பாஜக அரசின் வழக்கறிஞர்கள்தான். ஆனால் விஜய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.

voting vote

திமுக எதிர்ப்பு

திமுக இந்த திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதோடு இல்லாமல் இதற்கு எதிராக நேற்று 50+ கட்சிகளை கொண்ட அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியது. மேலும் S.I.R. நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்; இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட கண்டனத்தில், பாரதிய ஜனதா கட்சியும் (BJP) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (AIADMK) இணைந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision - SIR) பணிகளைப் பயன்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தினர், பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

ஆனால் திமுகவை அறிக்கையில் விமர்சனம் செய்துள்ள விஜய் பாஜகவை மென்மையாக தடவிகொடுத்துள்ளார் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சிகளும், விஜயின் தவெகவும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் அறிக்கை

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தவெக சார்பில் அதை கடுமையாக எதிர்த்து அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம்.

அப்போது எச்சரித்தது போலவே பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. குறிப்பாக இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறி வைத்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. முதல் கட்டச் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில் இரண்டாம் கட்டத் திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையில் சரியான நகர்வாய் இருக்க முடியும்?

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படி சரிபார்க்க முடியும்? இந்த வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் வாயிலாக, பீகாரில் நடைபெற்றதைப் போல் தமிழகத்திலும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன.

அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் அசாமில் மட்டும் தனியாகச் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பும் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே உள்ளது. எனவே சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற குழப்பமான நடைமுறையை விடுத்து, ஏற்கெனவே இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

மேலும் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் நிலையில் இது தொடர்பாக தவெக சில ஆலோசனைகளை முன் வைக்கிறது.

1. வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருப்பின், முறையான படிவத்தின்படி பட்டியல் திருத்த நடைமுறை வாயிலாக, அதனைச் சரிசெய்து முறையான, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.

2. இந்த நடைமுறை வாயிலாகப் புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களையும் போலியான பெயர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும்.

3. புதிய வாக்காளர்களுக்கான அடையாளம் மற்றும் வயது ஆதாரத்திற்கு ஆதார் அட்டையை ஓர் ஆவணமாக ஏற்க வேண்டும்.

4. திருத்தம் செய்து இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் பாக முகவர்கள் சரிபார்க்கும் வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

5. வேட்புமனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்குப் பிறகு புதிய வாக்காளர்களைச் சேர்க்கக் கூடாது.

6. வாக்காளர் திருத்த நடைமுறை முடிவடைந்து புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் அரசியல் கட்சிகளுக்கு டிஜிட்டல் இயந்திரத்தில் வாசிக்கக் கூடிய வடிவில் அப்பட்டியல் வழங்கப்பட வேண்டும்.

7. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையத்தில் எளிதில் தேடும் வசதியுடன் வெளியிட வேண்டும்.

நம் மண்ணின், மக்களின் உரிமையைக் காக்க அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது. அதே சமயம் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை வெறும் வாக்கு அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் திமுகவின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம்.

அண்டை மாநிலமான கேரள அரசு, சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் இயற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை, அந்த மக்களின் உரிமை மீதான அக்கறையைக் காட்டுகிறது. ஆனால் சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் திமுக இது குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?

தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அரசு சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே அதில் கலந்து கொண்டு மக்கள் உரிமைகளுக்காகத் தவெக நிலைப்பாட்டைத் தெரிவித்தோம். ஆனால் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிரான திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான நோக்கத்தையும் பின்னணியையும் மக்கள் அறியாமல் இல்லை.

தேர்தல் நெருக்கத்தில் திமுகவின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம் திமுக அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும். சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கனவே தமிழகத்தில் முதல் குரலாக ஓங்கி ஒலித்தது, தவெகவின் குரல்தான்.

இதை நாடும் நாட்டு மக்களும் நன்றாகவே அறிவர். நாம் முதல்முதலாகக் குரல் எழுப்பிய அந்த நேரத்தில் திமுக தூங்கிக் கொண்டிருந்ததா? ஒன்றிய பாஜகவுடன் மறைமுக உறவுக் காரராக இருந்தால் மறதி மயக்கத்தில் இருந்ததா? ஏதோ இப்போது மட்டும் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக முதல் முறையாக விழித்துக் கொண்டது போலவும் தான் மட்டுமே ஜனநாயக உரிமையின் ஒற்றைப் பாதுகாவலன் போலவும் கபட நாடக வேடத்தைப் பூண்டுள்ளது, அப்பட்டமான ஏமாற்று வேலை. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றுவதைப் போல எல்லோரையும் ஏமாற்றிவிடலாம் என திமுக நினைக்கிறதா?

இந்தக் கேள்விகள் மக்கள் மனதிலும் எழுந்துள்ளன. எனவே திமுகவின் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஜனநாயகத்திற்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் சுதந்திரமாகக் குரல் கொடுப்பதில் தவெக எப்போதும் முதல் இயக்கமாக இருக்கிறது. இதைத் தமிழக மக்கள் அனைவரும் அறிவர். ஜனநாயக மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டால் அது ஒன்றிய பாஜக அரசாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் சமரசமின்றி எதிர்ப்பதில் தவெக எப்போதும் போல் தீர்க்கமாக இருக்கும்.

ஆகவே, சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக தவெக சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும். தவெக மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்ட பகுதி, கிளை நிர்வாகிகள் என அனைவரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை விழிப்போடு கண்காணிப்பர். மக்கள் நலன், ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் மக்களுடன் மக்களாக, மக்கள் பக்கம் மட்டுமே தவெக உறுதியாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தவெக விஜய் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+