மக்கள் கோபத்தால் பணிந்தார் விஜய்! பிரச்சார கூட்டம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவத்தின் எதிரொலியாக தவெக பிரச்சாரக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 2 வாரங்களுக்கான விஜய்யின் பிரச்சாரங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில் விஜய்யின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூரில் கோரச் சம்பவம் நடந்திருக்கும் நிலையில், பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அன்று இரவே கரூரில் இருந்து திருச்சி வந்த விஜய், உடனடியாக தனி விமானம் மூலமாக சென்னை திரும்பினார்.

விஜய் தனது வீட்டிற்கு சென்ற பின், கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் பதிவை வெளியிட்டார். இதனிடையே கரூர் கொடூர சம்பவம் தொடர்பாக முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர்.
விஜய் முதற்கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் 3 மாவட்டங்களுக்கு பயணித்து மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதற்கட்ட பிரச்சாரத்தின் போதே 3வது மாவட்டத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் 2வது கட்ட சுற்றுப்பயணத்துக்கு முன்பாகவே, பிரச்சார அட்டவணை மாற்றப்பட்டது. இனி ஒவ்வொரு வாரமும் 2 மாவட்டங்களுக்கு பயணிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜய்யின் 4வது, 5வது கட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கான விஜயின் மக்கள் என்றும், விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்த புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தவெக தலைவர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
"கழகத் தோழர்களுக்கு வணக்கம். நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications