கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இஸ்லாமிய தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் இந்துக் கோவில்களில் பிரார்த்தனை செய்து தேங்காய் உடைத்து வழிபாடு செய்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இதுவரை தமிழக வெற்றி கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றி கழகம் அறிவித்திருந்த நிலையில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை நடத்தி வந்த கட்சியின் நிறுவனர் புதுக்கோட்டை கே.எம்.ஷெரீப் என்பவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சியையும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைத்து வேட்பாளர் பட்டியலை அக்கூட்டணி அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை வேட்பாளர்
அந்த வகையில், இதுவரை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அனைவராலும் எதிர்பார்த்துக் காத்திருந்த முகமது பர்வேஸ் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக மாற்றி அறிவிக்கப்பட்டார். புதுக்கோட்டைக்கு யார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் உலகேந்திரன் என்பவர் போட்டியிடுவார் என்று பலராலும் சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.ஷெரீப் புதுக்கோட்டை வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தார்.
தேங்காய் உடைத்து..
இருவரும் சேர்ந்து சென்னையில் இருந்து புதுக்கோட்டையில் வந்து இறங்கும்போது கூட்டணி சார்பில் தொண்டர்கள் வரவேற்பளித்தனர். புதுக்கோட்டை மாநகர எல்லையான கருவேப்பிலான் கேட் அருகில் இருந்து மாலை மரியாதை செய்யப்பட்டு மாநகருக்குள் அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரும் திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள அய்யனார் கோவில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அங்குள்ள அய்யனாரை வழிபட்டு தேங்காய் உடைத்து அங்கிருந்து ஊர்வலமாக நகருக்குள் வந்தனர்.
பெரியார் சிலைக்கு மாலை
இந்த ஊர்வலத்தில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்த கூட்டணியின் தொண்டர்கள் விசிலடித்தவாறு ஆரவாரம் முழக்கமிட்டு ஊர்வலமாக வந்தனர். பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள திராவிடர் கழகம் அலுவலக வளாகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இருவரும் ஊர்வலத்தை தொடர்ந்தனர்.
நகரில் முக்கியமான வீதிகளின் வழியாக வந்து தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்திற்கு தொண்டர்களுடன் வந்தனர். இஸ்லாமிய வேட்பாளர்கள் அவர்களது வழிபாட்டு முறைகளை மறந்து அல்லது மறுத்து இந்துக் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்த சம்பவம் புதுக்கோட்டையில் புதிதாக அரங்கேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications