தவெக தலைவர் விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு.. பெரம்பலூர் போலீஸார் நடவடிக்கை
சென்னை: மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், தொண்டரை தாக்கிய குற்றச்சாட்டில், தவெக தலைவர் விஜய், பவுன்சர்கள் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யை பார்ப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆர்வத்துடன் மதுரைக்கு வந்தனர். இதனால், மதுரை மாவட்டமே களைகட்டியது.

மாநாட்டு மேடைக்கு முன்பாக மிகப் பிரம்மாண்டமான ரேம்ப் அமைக்கப்பட்டிருந்து. அப்போது, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் ரேம்ப் வாக் சென்று, மக்களுக்கு கையசைத்தார். அப்போது, விஜயின் அருகில் செல்வதற்காக தொண்டர்கள் சிலர் 'ரேம்ப் வாக்' மேடையின் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, விஜயின் பவுன்சர்கள் தொண்டர்களை அப்புறப்படுத்தினர்.
ரேம்பின் மீது ஏறிய பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் விவதாப் பொருளானது.
இந்நிலையில், தவெக தொண்டர் சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோசம் ஆகிய இருவரும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனிடம் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது நேற்று புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், தவெக தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது 3 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications