தவெகவின் ரியல் வீக்னஸ்.. விஜய் சுற்றுப்பயணத்திற்கு பின் நிர்வாகிகள் கப்சிப்.. புலம்பும் தொண்டர்கள்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் கட்டத் தலைவர்கள் முழு அரசியல்வாதியாக மாறவில்லை என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. ஏனென்றால் மாவட்ட வாரியாக தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்ட நிலையில், அவரது கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஒரு பொதுக்கூட்டமோ, தெருமுனை பிரச்சாரத்தையோ கூட தவெக முன்னெடுக்கவில்லை.
2026 சட்டசபைத் தேர்தல் இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே மதுரையில் 2வது மாநில மாநாடு நடத்தப்பட்ட நிலையில், தற்போது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டார்.

அடுத்தடுத்து ஒவ்வொரு வாரமும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் இன்னும் முழுமையாக அரசியல்வாதிகளாக மாறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏனென்றால் தவெக சார்பாக 120 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விஜய்யின் ஒவ்வொரு கருத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால் தவெகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் இதுவரை எந்த மாவட்டத்திலும் ஒரு பொதுக்கூட்டமோ அல்லது தெருமுனைப் பிரச்சார கூட்டத்தையோ கூட நடத்தவில்லை. மிகப்பெரிய அளவில் திருச்சியில் கூட்டம் கூடிய போது, அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களை அரசியல்படுத்தும் வகையில் அடுத்த வாரமே ஒரு பொதுக்கூட்டத்தை மாவட்டச் செயலாளர்கள் நடத்தி இருக்க வேண்டும்.
திமுக மற்றும் அதிமுகவிடம் இருந்து தவெக மாறுபடுவது இங்குதான். தவெகவின் கொள்கைத் தலைவர்களின் பிறந்தநாளில் கூட அக்கட்சி நிர்வாகிகள் பொதுக்கூட்டங்களை நடத்துவதில்லை. ஆனால் திமுக மற்றும் அதிமுக எந்தவொரு தலைவர்களின் பிறந்தநாளையும் தவறவிடுவதில்லை. ஸ்டாலினின் கருத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் மக்கள் மத்தியில் கொண்டு சென்றுவிடுவார்கள்.
மதுரை மாநாட்டிலேயே தவெகவின் 2ஆம் கட்டத் தலைவர்களிடம் வலிமை இல்லை என்பதை விஜய் உணர்ந்துவிட்டார். அதற்காகதான் ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தற்போது விஜய்யின் சுற்றுப்பயணத்தில் தவெக 2ஆம் கட்டத் தலைவர்களின் வலிமை அப்பட்டமாக தெரியத் தொடங்கி இருக்கிறது.
இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா என்று விமர்சித்து வருகின்றனர். வரும் நாட்களிலாவது விஜய் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின், மாவட்டச் செயலாளர்கள் பொதுக்கூட்டங்களை நடத்த தவெக தலைமை உத்தரவிட வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் சிலரே பேசத் தொடங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications