கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் எடுத்த அதிரடி முடிவு.. அடியோடு மாறிய திட்டம்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில் சிக்கி 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். இந்த நிகழ்வுக்கு பிறகு தவெக மற்றும் விஜய்யின் செயல்பாடு முடங்கிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திக்காமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. விரைவில் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளார் என்று தவெகவினர் கூறி வந்தனர். இந்நிலையில் விஜய் கரூர் விசிட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். பாதிக்கப்பட்ட மக்களை சென்னை வரவழைத்து விஜய் ஆறுதல் சொல்ல முடவு செய்துள்ளார்களாம்.
நடிகர் விஜய் கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார். அவர் அரசியலில் நுழைந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகிவிட்டன. ஆனால் விஜய் அரசியல் களத்திற்கு வந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகள், கோவை பூத் கமிட்டி கூட்டம், சென்னை பொதுக்குழு கூட்டம், சென்னை அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழா, ஆளுநர் சந்திப்பு, பனையூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய மக்களை சந்திப்பு ஆகியவற்றுக்கு வந்துள்ளார்.

விஜய் அரசியல்
தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் கூட அவர் பனையூர் அலுவலகத்தில் அவர்களின் படத்தை வைத்து மரியாதை செய்கிறார். விஜய் வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார், பனையூர் பண்ணையார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் முழு நேரம் அரசியலில் இறங்க போவதாக தவெகவினர் கூறினார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் அவர் மாவட்டம் வாரியாக மக்களை சந்திக்க தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்தார். கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டு 41 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல மக்கள் காயமடைந்தார்கள்.
கரூர் சம்பவம்
தவெகவில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் கட்டமைப்பு இல்லாதது, விஜய் தாமதமாக வந்தது ஆகியவை குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தவெக சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மற்ற கட்சிகள் சார்பிலும் இழப்பீடு அறிவிக்கப்பட்டு, கட்சி நிர்வாகிகள் நேரடியாக சென்று மக்களை சந்தித்தனர்.
அதேநேரத்தில் விஜய் உள்ளிட்ட அந்தக் கட்சியின் நிர்வாகிகள் யாரும் கரூர் மக்களை நேரடியாக சந்திக்காமல் உள்ளனர். வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு பிறகு தான் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நிர்வாகிகள் வெளியில் வரத்தொடங்கினார்கள். இப்போது வரை விஜய் கரூர் கூட்ட நெரிசலில் பாதித்த மக்களை சந்திக்காமல் இருப்பது பெரும் விமர்சனமாகியுள்ளது.
சென்னையில் சந்திப்பு
தற்போதுவரை விஜய் அந்த மக்களை வீடியோ காலில் மட்டுமே ஆறுதல் கூறியுள்ளார். கடந்த ஒரு மாதமாக தவெக மற்றும் விஜய்யின் செயல்பாடு முற்றிலும் முடங்கியுள்ளது. விரைவில் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருப்பதாக தவெகவினர் கூறி வருகிறார்கள். கரூரில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்து விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. கரூரில் மண்டபம் கிடைக்க தொடர்ந்து சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் தவெக சார்பில் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னை அழைத்து வந்து விஜய்யை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தலா 3-4 பேரை சென்னை அழைத்துவந்து ஆறுதல் சொல்ல விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது என தவெகவினர் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications