தவெக வேட்பாளர்களை அறிவித்த சில நிமிடங்களில் விஜய்க்கு அதிர்ச்சி.. பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டு
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிடவுள்ளது. நாம் தமிழர், அதிமுக, திமுக கட்சிகளை தொடர்ந்து தவெக இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி நிறைவடைவதற்கு முன்பே அங்கு திடீரென தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டு நடத்தியதில் விஜய் மற்றும் தவெகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்தார். தவெக தேர்தல் வாக்குறுதிகளையும் விஜய் அறிவித்தார். இதற்கு பிறகு விஜய் 234 தொகுதி வேட்பாளர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

தவெக நிகழ்ச்சியில் ரெய்டு
அப்போது தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்ற பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். உள்ளே செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். அதனால் உள்ளே என்ன நடக்கிறது என்கிற விபரங்கள் வெளியில் தெரியவில்லை. முதல்கட்ட தகவல்படி, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
அதனடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தி வருகிறார்கள். தேர்தல் நடைமுறைகள் பின்பற்றுள்ளனவா அல்லது தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து பறக்கும் படை அதிகாரிகள் அந்தப் பகுதியில் விசாரணை நடத்தி வருகிறார்கள். விதிகள் மீறப்பட்டிருந்தால் உடனடியாக தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முற்றுகை
ஏற்கனவே முறையாக நேர்காணல் நடத்தாமல் வேட்பாளர்களை அறிவித்துவிட்டதாக தவெகவினர் அதிருப்தியில் இருக்கிறார். இதைக் கண்டித்து தவெகவினர் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்ற நுங்கம்பாக்கம் தனியார் ஹோட்டலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications