போராட்டம் சமரசமின்றி தொடரட்டும் தோழர்.. பெ. சண்முகத்துக்கு விஜய் வாழ்த்து
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், மக்களுக்கான போராட்டம் வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும் என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கோ. பாலகிருஷ்ணன் இருந்தார். எனக்கு அடுத்த மாதத்துடன் 72 வயதாகிறது. கட்சி விதிகள்படி 72 வயதைக் கடப்பவர்கள் பதவியில் இருக்கக் கூடாது. எனவே எனக்கு இந்தப் பதவி வேண்டாம். இதில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அந்தக் கட்சியின் 24வது மாநில மாநாடு நடைபெற்றது. பாலகிருஷ்ணனின் முடிவால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு ஆலோசனை செய்தனர். அதில் ஒருமித்த முடிவாக அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகியும், வாச்சாத்தி விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டவருமான பெ.சண்முக புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுவுடைமை கொள்கை, சாமானிய மக்களுக்கான அரசியல், போராட்டம் என்று செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது கடந்த சில ஆண்டுகளாக தொடர் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. திமுக கூட்டணியில் இணைந்து பதவிக்காக தங்களின் அடையாளத்தை படிப்படியாக இழந்து வருவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் சண்முகம் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முதல் செய்தியாளர் சந்திப்பிலேயே அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். "மதவெறி சக்திகளை எதிர்க்கும் தி.மு.க-வுடன் தொடர்ந்து பயணிப்போம். போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசியல் சாசனத்தில் உள்ளவை. எந்த அரசும் அதை நிறுத்த முடியாது. தி.மு.க வெளிச்சத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என்று முரசொலியில் சொல்வது பொருத்தமானதல்ல." என்று கூறியிருந்தார்.
அவரின் பேச்சு அரசியல் ரீதியாக ஆழமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி ஒலித்த சண்முகம் மாநிலச் செயலாளர் பதவிக்கு வந்திருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. அதன்படி சண்முகத்துக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் சண்முத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications