தங்கம் மாதிரி கிடைத்த வாய்ப்பை.. நழுவவிடும் விஜய்.. இதெல்லாம் போனால் வராது.. சுதாரிக்குமா தவெக?
சென்னை: அதிமுக கூட்டணியிலும், அதிமுக உள்ளேயும் ஏகப்பட்ட பிரச்சனைகள், மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதை விஜய் நினைத்து இருந்தால் சாமர்த்தியமாக செயல்பட்டு தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் தங்கம் மாதிரி கிடைத்த வாய்ப்பை விஜய் நழுவவிட்டுக்கொண்டு இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும் என அவர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு விதித்தார்.

அதிமுக செங்கோட்டையன்
கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, 2009 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் எடப்பாடி பழனிசாமியே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை செங்கோட்டையன் ஆவேசமாக சுட்டிக்காட்டினார். தனது காலக்கெடு குறித்து விளக்கமளித்த அவர், "பத்து நாட்களுக்குள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடுவேன்" என்று அறிவித்தார்.
மேலும், "தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டுமே இனி எடப்பாடி பழனிசாமியுடன் பரப்புரைகளில் பங்கேற்பேன்" என கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார். "அனைவரையும் ஒன்றிணைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செங்கோட்டையன் காய் நகர்த்தி வருகிறார்.
செங்கோட்டையன் பதவிகள் நீக்கம்
இதையடுத்து செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். முக்கியமாக செங்கோட்டையனின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதையடுத்து செல்வராஜ் என்பவர் செங்கோட்டையன் வகித்த ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
இந்த செல்வராஜ் தலைமையில் கடந்த 20ம் தேதி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 13 கவுன்சிலர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகிகள் பலரும் கூட இதில் கலந்து கொள்ளவில்லை. மாறாக இவர்கள் அதே நாள் செங்கோட்டையன் நடத்திய கூட்டத்திற்கு சென்றுள்ளனர்.
அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு இடையே பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பில், இனியும் காத்திருப்பது சரி அல்ல. சிலரின் துரோகத்தால் தான் கட்சி ஆரம்பித்தோம். துரோகம் செய்தவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் திருந்தவில்லை . அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை என்று தெரிந்துவிட்டது. இனியும் காத்திருப்பது சரி அல்ல, எங்களின் வழியில் செல்கிறோம் .ஆணவம், அகங்காரம் பிடித்து சவுண்ட் பார்ட்டி போல் செயல்படுகிறார் (இபிஎஸ்) . டிசம்பரில் யாருடன் கூட்டணி என்று சொல்கிறோம். திருந்துவார்கள் அல்லது திருத்துவார்கள் என எண்ணினோம், அதற்கு வாய்ப்பில்லை, நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம், என்று கூறி உள்ளார்.
விஜய்க்கு கிடைத்த வாய்ப்பு
இதன் மூலம் விஜய்க்கு சாதகமாக பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. டிடிவி தினகரனை தவெக கூட்டணியில் சேர்க்க முடியும். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் அணியை தவெக கூட்டணியில் சேர்த்திருக்க முடியும். முக்கியமா செங்கோட்டையனை பேசி தவெக கட்சிக்கு வரவழைத்து இருக்க முடியும்.
இத்தனை வாய்ப்புகள் இருந்தும் விஜய் தரப்பும் எதுவும் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் திமுக கூட்டணியை உடைக்க தீவிரமாக விஜய் பல இடங்களில் முயன்றார். விசிகவை, கம்யூனிஸ்ட் கட்சிகளை இழுக்க தீவிரமாக முயன்றார். அவர் நினைத்து இருந்தால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்களை இழுப்பதற்கான பணிகளை செய்து இருக்கலாம்.
அதிமுக கூட்டணியிலும், அதிமுக உள்ளேயும் ஏகப்பட்ட பிரச்சனைகள், மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதை விஜய் நினைத்து இருந்தால் சாமர்த்தியமாக செயல்பட்டு தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் இதை தொடர்ச்சியாக விஜய் தவறவிட்டுக்கொண்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications