இறங்கிட்டாரு விஜய்.. CAA போன்ற எந்த பிளவுவாத சட்டத்தையும் ஏற்க முடியாது.. தவெக சரவெடி!
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிளவுவாத அரசியலை முன்னிறுத்தும் எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல என விஜய் தெரிவித்துள்ளார்.
2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு இன்று வெளியிட்டது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் சிஏஏ சட்ட அறிவிக்கையை மத்திய பாஜக அரசு வெளியிட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

2019ஆம் ஆண்டில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன். கொரோனா தொற்று காரணமாக போராட்டங்கள் ஓய்ந்திருந்தன. சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், அதனை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால், மீண்டும் நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
சிஏஏ சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்றும் பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சிஏஏ சட்டம் அமலுக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act 2019) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்" என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications