ஜனவரி 25ல் தவெக செயல் வீரர்கள் கூட்டம்.. 38 நாட்களுக்கு பின் அரசியல் மோடுக்கு வரும் விஜய்!
சென்னை: ஜனவரி 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. டிசம்பர் 18ஆம் தேதிக்கு பின் விஜய் எந்த வகையான அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத சூழலில், 38 நாட்களுக்கு பின் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்று பயங்கரமாக பணியாற்றி வருகின்றனர். இன்னொரு பக்கம் எதிர் முகாமில் இருக்கும் ஆட்களையும் தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் தவெக தலைவர் விஜய்யோ அமைதியோ அமைதி மோடில் இருக்கிறார்.

கடைசியாக டிசம்பர் 18ல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று இருந்தார். இதன்பின் கிறிஸ்துமஸ் விழாவில் கதை சொல்லிட்டு, ஜனநாயகன் பட ரிலீஸ் பணிகளில் மூழ்கி இருந்தார். ஆனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் ரிலீஸாகவில்லை. இதற்காக ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்டோர் குரல் கொடுத்த போதும் கூட, விஜய் அரசியல் நாகரீகம் கருதி நன்றி கூட சொல்லவில்லை.
அவரும் ஜனநாயகன் படம் தொடர்பாக பேசாமல் அமைதி காத்து வருகிறார். அதேபோல் ஜனவரி 12 மற்றும் ஜனவரி 19 ஆகிய இரு நாட்களும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். இந்த விசாரணைக்கு பின் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. விஜய் மட்டுமல்லாமல் தவெகவினரும் சைலண்ட் மோடுக்கு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் ஜனவரி 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக 38 நாட்களுக்கு பின் விஜய் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்திலாவது ஜனநாயகன் ரிலீஸ் தொடர்பாக பேசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் விஜய்யின் பிரச்சார பயணம் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விஜய் சென்றிடாத சூழலில், அதற்கேற்ப பிரச்சார பயணம் திட்டமிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications