தண்ணீரில் மிதக்கும் சென்னை..நிதி ஒதுக்கியும் முடிக்கப்படாத வடிகால் வசதி பணி - தமிழக அரசை சாடிய விஜய்
சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வடிகால் வசதிகளை அரசு முறையாக முடிக்காததே இந்த துயரத்திற்கு காரணம் என்றும் தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: "சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம்.

பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை.
மக்கள் மீது சிறிதேனும் அக்கறை இருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications