எஸ்பி ஆபீசுக்கு ஓடிய புஸ்ஸி ஆனந்த்.. கொடுத்த மிக முக்கிய லெட்டர்! விஜய் பிரச்சாரம் திட்டம் இதுதான்
சென்னை: தவெக தலைவர் விஜய் அடுத்த கட்டமாக மாநிலம் முழுக்க தீவிரப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அடுத்த வாரம் முதற்கட்டப் பிரச்சாரத்தை அவர் ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. இதற்கிடையே பெரம்பலூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு மாவட்ட எஸ்பியிடம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடிதம் கொடுத்தார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் தேர்தல். ஆனாலும், சில மாதங்களில் தேர்தல் நடக்கும் பீகார் தேர்தல் களத்தை விடவும் தமிழக அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது. எல்லாக் கட்சிகளுமே தேர்தலை மனதில் வைத்தே நடவடிக்கை எடுத்து வருகின்றன. வலுவான ஒரு கூட்டணியில் அடுத்தாண்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதால் அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

விஜய் அரசியல்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விஜய் அரசியல் கவனிக்க வைக்கும் ஒரு விஷயமாக மாறியுள்ளது. அவர் தனது கடைசி படமான "ஜனநாயகன்" வேலைகள் நடந்து வருகிறது. மறுபுறம் அவர் அரசியலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். கடந்த மாதம் தான் தவெகவின் 2வது மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதற்குத் தமிழகத்தில் நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்தது.
இதற்கிடையே அடுத்தகட்டத் திட்டமாக மாநிலம் முழுக்க பிரச்சாரத்தைத் தொடங்க விஜய் திட்டமிட்டிருக்கிறார். முதற்கட்டமாக பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரத்திற்காகத் திட்டமிடப்பட்டு வருகிறது. வரும் 13ம் தேதி முதல் இந்த முதற்கட்டப் பிரச்சாரத்தை ஆரம்பிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருக்கிறார்.
புஸ்ஸி ஆனந்த்
இதற்குத் தேவையான நடவடிக்கைகளை விஜய் கட்சியினர் எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு மாவட்ட எஸ்.பி.யிடம் கடிதம் கொடுத்தார். இதற்காக எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் வந்த புஸ்ஸி ஆனந்த் அனுமதி கேட்டு கடிதம் வழங்கினார். மேலும், பிரச்சாரத் திட்டம் தொடர்பாக எடுத்துரைத்த புஸ்ஸி ஆனந்த், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
பொதுமக்களுக்குச் சிரமம் வராது
பிரச்சாரத்திற்கு (விஜய்) மாலை 3.30- 4.30க்குள் வந்துவிடுவார் என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அரியலூர் ஜங்கஷன், பெரம்பலூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பேசத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பொதுமக்களுக்கு எந்தவொரு சிரமமும் இல்லாமல் இருக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கட்சித் தொண்டர்கள், தன்னார்வலர்கள் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் அவர் கூறினார்.
கடந்த மாதம் நடந்த விஜய் மாநாட்டிற்குத் தமிழகத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. விஜய் மாநாட்டில் பங்கேற்கப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் வருகை தந்தனர். இந்தச் சூழலில் தான் மாநிலம் முழுக்க கவர் செய்யும் வகையில் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
தமிழக அரசியல் சூழல்
தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தவரை இப்போது திமுக, அதிமுக தலைமையில் இரு கூட்டணிகள் உள்ளன. இதுபோக சீமான் வழக்கம் போலத் தனித்துக் களமிறங்கவே இருக்கிறார். இந்தச் சூழலில் தான் விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளார். தவெக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்பதே அக்கட்சியினர் விருப்பம். இதன் காரணமாகவே ஆட்சியில் பங்கு என்றெல்லாம் அறிவித்தார் விஜய். மேலும், இது தொடர்பாகத் திரைமறைவிலும் பேச்சுவார்த்தை நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், எந்தவொரு முக்கிய கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications