இனி பிரச்சார வாகனத்திற்கு நோ.. ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.. ஜெயலலிதாவை பின்பற்றும் விஜய்!
சென்னை: தவெக தலைவர் விஜய் வரும் நாட்களில் தனி ஹெலிகாப்டர் மூலமாக பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக பெங்களூரைச் சேர்ந்த ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் இந்த மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தெரிகிறது.
தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் உருவாகி வருகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இணையான கட்டமைப்பு இல்லையென்றாலும், சாமானிய மக்கள் மத்தியில் விஜய்யின் இமேஜ் உச்சத்தில் இருக்கிறது. இதனால் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு இருந்து வருகிறது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திற்கு பின் திமுக சார்பாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட விஜய்க்கு 23 சதவிகித வாக்குகள் இருப்பதாக தெரிய வந்தது. இதனால் தவெகவுடன் எப்படியாவது கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்பதில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தீவிரமாக உள்ளது. ஆனால் முதல் தேர்தலிலேயே கூட்டணி அமைக்க விஜய் தயக்கம் காட்டி வருகிறார்.
இதனிடையே விஜய் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார். கரூர் சம்பவத்திற்கு பின் மீண்டும் சாலைகளில் விஜய் செல்வது விமர்சனத்தை ஏற்படுத்தும். விஜய்யை பார்க்க மக்களும் அதிகளவில் வருவார்கள் என்பதோடு, தனி விமானம் மூலமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் பயணிக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது.
விஜய்யை பின் தொடர்ந்து ஒரு கூட்டம் தொடர்ந்து வரும் என்பதால், இனி மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியை பின்பற்ற முடிவு எடுத்துள்ளார். இனி வரும் நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்தில் பிரச்சாரப் பயணமாக அல்லாமல் பொதுக்கூட்டத்தை நடத்த விஜய் முடிவு எடுத்திருக்கிறார். அந்த பொதுக் கூட்டத்திற்கு தனி விமானம் மூலமாக விமான நிலையம் செல்லலாம்.
அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாக பொதுக்கூட்டம் நடத்தும் இடத்திற்கு நேரடியாக சென்று களமிறங்கலாம் என்றும், இதன் மூலமாக தொண்டர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்திற்கு விஜய்யின் தாமதமும் ஒரு காரணம் என்று சட்டசபையில் வைத்து முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இதனால் விஜய்யின் பிரச்சாரத்தில் இனி நேர தாமதம் ஏற்படக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். இதனால் பெங்களூரைச் சேர்ந்த ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் ஒரு ஆண்டுக்கு 4 ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனை ஆதவ் அர்ஜுனா தலைமையிலான குழு மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications