தவெகவை கூட்டணிக்கு நெருக்கும் அதிமுக, பாஜக.. கரூர் செல்ல தயங்கும் விஜய்.. என்ன நடக்கிறது?
சென்னை: கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 20 நாட்களாகி இருக்கும் போதும் தவெக தலைவர் விஜய் இதுவரை பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. ஒரு பக்கம் சட்டசபையில் வைத்து ஸ்டாலின் நேரடியாக விஜய் மீது குற்றம்சாட்டிய போதும், தவெக தரப்பில் இருந்து ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. கரூர் செல்வதற்கு விஜய் இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு பின் தவெக தலைமை அமைதியாகவே உள்ளது. தவெக தலைவர் விஜய் ஒரேயொரு வீடியோ, 2 ட்வீட்களை மட்டும் பதிவிட்டு, பட்டினம்பாக்கம் வீட்டிற்கும், பனையூர் அலுவலகத்திற்கும் மட்டும் சென்று கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் தவெகவுக்காக அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் நேரடியாக சட்டசபையிலேயே குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர். இதனால் தவெக கூட்டணி சேர வேண்டிய கட்டாயத்தை அதிமுக மற்றும் பாஜக உருவாக்கி வருவதாக பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் நயினார் நாகேந்திரன், கரூர் கூட்டத்தில் 41 பேர் கொலை செய்துவிட்டார்கள் என்றெல்லாம் பேசி வருகிறார்.
அதேபோல் உச்சநீதிமன்றத்திலும் தவெகவுக்கு ஆதரவாக பாஜகவினர் பலரும் வழக்கு தொடுத்தனர். மறுபக்கம் சட்டசபையில் வைத்து முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் 7 மணி நேரம் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தார் என்று விளாசி இருக்கிறார். என்னதான் முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம்சாட்டவில்லை என்றால், சோசியல் மீடியாவில் திமுகவினர் விஜய்யை அட்டாக் செய்து வருகின்றனர்.
ஒரு கட்டம் வரை தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் சோசியல் மீடியாவில் பதில் கொடுத்து வந்தாலும், இதுவரை பாதிக்கப்பட்டு உயிரிழந்த 41 பேருக்காக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் ஒரு மெழுகுவர்த்தி கூட ஏற்றப்படவில்லை. அதேபோல் விஜய் விரைவில் கரூர் செல்கிறார், அனுமதி கடிதம் கோரப்பட்டுள்ளது என்றெல்லாம் கூறினாலும், 20 நாட்களாக அமைதி காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால் கரூர் செல்வதற்கு விஜய் தயக்கம் காட்டுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் 2ஆம் கட்டத் தலைவர்கள் கொஞ்சம் கூட வலிமை இல்லாமல் இருப்பதும் கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டச் செயலாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையிலான இடைவெளி விஜய்க்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
இதனால் தீபாவளிக்கு பின் விஜய் அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருளில் மூழ்கி கிடக்க, விஜய் நிதானமாக கரூர் செல்ல முடிவு எடுத்திருப்பது கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இதனால் தவெகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications