தீயசக்தி திமுக.. பிளவுவாத சக்தி பாஜக.. சட்டென குரலை மாற்றிய விஜய்.. தவெக முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. பாஜக மற்றும் திமுக இருவரையும் விமர்சித்து விஜய் மக்களுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளேன். இதற்காக சொல்லொணா நெருக்கடிகளையும், வேதனைகளையும் நமக்கு தந்துள்ளனர்.

திமுக பாஜக மீது விமர்சனம்
இதை விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?. நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும், கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் காணும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர். மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்காக அடிபணிவான்.
ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது. இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் தவெக முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கிறது.
நெருக்கடிகள், வேதனைகள்
தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும், அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது. அதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும். தவெக அளக்க முடியாத ஆழ்கடல். விலக்க முடியாத விரிவானம். நேர்மையின் நெருப்புக்கோளம். மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருக்கிறது.
சமூகநீதிக் காவலரண், ஜனநாயகப் பேரரண். இப்படிப்பட்ட தவெகவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும். பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும். மக்களே...மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும், இத்தனை நிர்பந்தங்களையும், இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான்.
பிரிக்க முடியாது
எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை 'நீ வாப்பா'... 'நீ வா தம்பி'... 'நீ வாண்ணா'... 'நீ வா நண்பா'... 'நீ வா தோழா'... 'நாங்க பாத்துக்கறோம்'... என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை. இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன்.
உங்களையும், என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும், எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த 'மற்றும் பலர்' சக்தியாலும் பிரிக்கவே இயலாது. அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி.
பணமழை
பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்.
ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் - லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக விசில் சின்னம் மட்டுமே இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications