விஜய் அடுத்த வாரம் மீண்டும் ஆஜராவார்.. சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? நிர்மல் குமார் விளக்கம்!
சென்னை: கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையில் தவெக தலைவர் விஜய் தேவையான விளக்கத்தை கொடுத்துள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பியுள்ள விஜய், தேவை ஏற்பட்டால் அடுத்த வாரம் மீண்டும் ஆஜராவார் என்றும் சிடிஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஆஜராகினார். சிபிஐ அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விஜய்யிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதேபோல் சிபிஐ விசாரணை முடிவடைந்த போதும், விஜய் நீண்ட நேரம் சிபிஐ அலுவலகத்திலேயே காத்திருக்க வைக்கப்பட்டார்.

இதன்பின் டெல்லியில் நேற்றிரவு தங்கிய விஜய்யிடம் இன்றும் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகை தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருப்பதால், விஜய் சென்னை திரும்பி இருக்கிறார். அடுத்த வாரத்தில் ஒருநாள் விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுவார் என்று உறுதி அளித்தால் மட்டுமே, நாளைய விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இதனால் ஜனவரி 19ஆம் தேதி விஜய் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுவார் என்று உறுதி அளித்துவிட்டு, சென்னை திரும்பியுள்ளார். இந்த நிலையில் சென்னையில் தவெக துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சிபிஐ விசாரணையில் தேவையான விளக்கத்தை விஜய் அளித்துள்ளார். இந்த வாரம் பொங்கல் கொண்டாட்டம் உள்ளது.
அதேபோல் ஜனநாயகன் படம் ரிலீஸ் தொடர்பாகவும் முடிவு எடுக்க வேண்டியுள்ளது. இதனால் நாங்கள் சிபிஐ விசாரணையை வேறொரு தேதிக்கு மாற்ற கேட்டுக் கொண்டோம். இதனால் அடுத்த வாரத்தில் ஒருநாள் சிபிஐ முன் ஆஜராகி இன்னும் நிலுவையில் உள்ள விசாரணையை எதிர்கொள்வோம். இன்னும் எந்த தேதி என்பதை முடிவு செய்யவில்லை.
ஒரு சில நாட்களில் முடிவு செய்து கூறிவிடுவோம். எங்களுக்கு வந்தது விட்னஸ் சம்மன். விசாரணையில் நடந்ததை வெளியில் சொல்வது மாண்பாக இருக்காது. கரூர் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன காவலர்கள் கணக்கிற்கும், எடிஜிபி டேவிட்சன் சொன்ன கணக்கிற்கும் முரண்பாடு உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு அவசரத்தில் நிறைய தவறுகளை செய்துள்ளது.
அதேபோல் கரூர் சம்பவத்தில் பிரேத பரிசோதனையில் குளறுபடிகள் நடந்துள்ளது. இறந்த குடும்பங்களை காவலர்கள் அழைத்து மிரட்டி முன் தேதியிட்டு கையெழுத்து வாங்கியதாகவும் புகார்கள் இருக்கின்றன. அதனையும் சிபிஐ வசம் புகார்களை கொடுத்துள்ளோம். கரூர் விவகாரத்தில் நியாயம் கிடைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications