TVK: வீராப்பாக சவுண்டு விட்ட தவெக தொண்டர்.. செய்தியாளர் அந்த கேள்வியை கேட்டதுமே தெறித்து ஓட்டம்!
சென்னை: தவெக தொண்டர்கள், செய்தி சேகரிப்பாளர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொள்வதும், அவர்களை அழைத்துக் கருத்து கேட்டால், நைஸாக எஸ்கேப் ஆவதும் தொடர்ந்து வருகிறது. அப்படி, ஊடக செய்தியாளர் ஒருவர் பேசும்போது சவுண்டு விட்ட தவெக தொண்டர் ஒருவர், செய்தியாளர் கேட்ட கேள்வியால் தெறித்து ஓடியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறார். விஜய், தமது பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், தவெக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். விஜய்யை பார்க்க அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் முண்டியடிக்கிறது.

தவெக அட்டகாசம்
விஜய் செல்லும் வேனை பின்தொடர்ந்து டூவீலர்களில் ரசிகர்கள் அபாயகரமான வகையில் சென்று வருவதும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. பாதுகாப்பாக பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்து வரும் நிலையிலும், அவற்றைப் பின்பற்றாமல், பச்சைக் குழந்தைகளை தூக்கிக்கொண்டு விஜய்யை பார்க்க வெயிலில் காத்திருப்பது போன்ற செயல்களும் தொடர்கின்றன.
சவுண்டு விட்ட தவெக தொண்டர்
கடந்த 13 ஆம் தேதி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் விஜய் பங்கேற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தின்போது, ஊடக செய்தியாளர் ஒருவர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, செய்தியாளரின் காதுக்கு அருகில் வந்து ஒரு தவெக தொண்டர் சவுண்டு விட்டார். உடனே செய்தியாளர், "என்ன பிரதர்.. பேசுறீங்களா?" என அவரிடம் மைக்கை நீட்டினார்.
இதையடுத்து பேசிய அவர், "இந்த முறை முதலமைச்சர் ஆகப்போவது விஜய் தான். மக்களுக்கு நல்லது செய்வார். தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வார். சினிமாவை விட்டுவிட்டு தமிழக மக்களுக்காக நல்லது செய்ய வருகிறார்." என சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.
தவெக தொண்டர் எஸ்கேப்
அதற்கு செய்தியாளர், "சினிமாவை விட்டுவிட்டு விஜய் வருகிறார் என்கிறீர்கள். இப்போது ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அதற்கே விஜய்யால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அவர் எப்படி ஆட்சிக்கு வந்து மக்களை காப்பாற்றப் போகிறார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனரே?" எனக் கேள்வி எழுப்பினார். உடனே அமைதியாக அங்கிருந்து எஸ்கேப் ஆனார் அந்த தவெக தொண்டர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர் கழுத்தில் கட்சி துண்டை போட்ட தொண்டர்
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு அரியலூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் நடைபெற்றபோது, ஒரு தவெக தொண்டர் செய்தியாளரை கடுமையாக தொந்தரவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நடனமாடியபடியே அந்த தொண்டர், செய்தியாளரின் கழுத்தில் கட்சிக் கொடி துண்டை போட்டும், அவரது தலையில் துண்டை கட்டியும், அவரைச் செய்தி சேகரிக்க விடாமல் தொடர்ந்து இடையூறு செய்தார்.
எனினும், அந்தச் செய்தியாளர் தவெக தொண்டரின் அந்த அநாகரீக செயலை பொறுத்துக்கொண்டு தொடர்ந்து செய்தி வழங்கினார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அரசியல் களத்தில், தவெக தொண்டர்களின் செயல்பாடுகள் முகச்சுழிப்பை ஏற்படுத்தின. இதுபோன்ற சம்பவங்கள் இன்று வரை தொடர்ந்து வருவது வேதனைக்குரியது.












Click it and Unblock the Notifications