சென்னையில் திமுகவை சாய்க்கும் தவெக..என்டிஏவுக்கு ’அணில்’ போல் உதவும் விஜய்! ரஜினியின் நண்பர் கணிப்பு
சென்னை: சென்னை போன்ற நகர்ப்புறங்களில் திராவிட முன்னேற்ற கழகம் (DMK) கட்சி பல இடங்களில் கடுமையான போட்டியை சந்திக்கக்கூடும். தமிழக வெற்றி கழகம் (TVK) உருவாக்கும் வாக்கு பிளவு, பல தொகுதிகளில் முடிவுகளை மாற்றக்கூடியதாக இருக்கும் என நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் ஆலோசகரும், பாஜக பிரமுகருமான அர்ஜுன மூர்த்தி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றை 1977 முதல் இன்று வரை ஆராய்ந்தால், ஒரு முக்கியமான போக்கு தெளிவாக தெரிகிறது வாக்காளர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே வந்துள்ளது. சில ஆண்டுகளில் இது மெதுவாக இருந்தாலும், சில ஆண்டுகளில் கோடிக்கணக்கில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்புடன் வாக்குப்பதிவு (polled votes) அதே அளவில் அதிகரித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில தேர்தல்களில் வாக்காளர் உயர்வு இருந்தும் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது.

அர்ஜுனமூர்த்தி கணிப்பு
1980ஆம் ஆண்டு சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்தபோதும், 44 லட்சம் வாக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டன. அதேபோல் 1984இல் 32 லட்சம் வாக்காளர்கள் உயர்ந்தாலும், வாக்குப்பதிவு 29 லட்சம் மட்டுமே உயர்ந்தது. 1989இல் 34 லட்சம் வாக்காளர்கள் உயர்ந்தும், வாக்குப்பதிவு வெறும் 11 லட்சம் மட்டுமே உயர்ந்தது. 1991ஆம் ஆண்டு ஒரு விதிவிலக்காகும். சுமார் 22 லட்சம் வாக்காளர்கள் உயர்ந்தும், வாக்குப்பதிவு 6 லட்சம் குறைந்தது. இது அன்றைய அரசியல் சூழ்நிலைக்கும், ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்திற்குப் பிந்தைய மனநிலைக்கும் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது.
வாக்கு பிளவு
1996இல் 48 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்தபோது, வாக்குப்பதிவு 64 லட்சம் உயர்ந்தது. ஆனால் 2001இல் 30 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்தும், வாக்குப்பதிவு 21 லட்சம் குறைந்தது. 2006 தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 30 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்த நிலையில், 58 லட்சம் வாக்குகள் கூடின. இந்த தேர்தலில் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் உருவாக்கிய அலை, வாக்குப்பதிவில் பெரும் உயர்வை ஏற்படுத்தியதோடு, ஆட்சிச் சமன்பாடுகளையும் பாதித்தது.
சிறப்பு தீவிர திருத்தம்
2011இல் வெறும் 6 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்திருந்தாலும், வாக்குப்பதிவு 38 லட்சம் உயர்ந்தது. 2016இல் 1.07 கோடி வாக்காளர்கள் அதிகரித்தபோதும், வாக்குப்பதிவு 66 லட்சம் மட்டுமே உயர்ந்தது.2021 இல் 47 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்தும், வாக்குப்பதிவு 27 லட்சம் மட்டுமே உயர்ந்தது. 2026 தேர்தலில், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதுடன், 27 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த வாக்காளர்கள் சுமார் 5.73 கோடியாக உள்ளனர். சுமார் 86% வாக்குப்பதிவை கணக்கில் எடுத்தால், மொத்த வாக்குகள் 4.9 கோடியை எட்டியுள்ளது.
என்டிஏவுக்கு வாய்ப்பு
இந்த உயர்வு எதிர்பார்த்ததை விட அதிகமாகும். இதில் விஜய் முக்கிய பங்கு வகித்திருக்கலாம். இதனுடன் சேர்த்து பார்க்கும்போது, 2026 தேர்தலில் இன்னொரு முக்கிய அரசியல் பரிமாணமும் உருவாகியுள்ளது. ஆட்சியின் செயல்திறன் குறைபாடு (anti-incumbency மற்றும் anti-incompetency) காரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சில பகுதிகளில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கொங்கு மண்டல தொகுதிகளில் மற்றும் குறைந்த வாக்குப்பதிவு சதவீதம் கொண்ட பகுதிகளில் சிறிய வித்தியாசத்தில் வெற்றிகளைப் பெறும் சூழல் உருவாகலாம்.
தமிழக வெற்றி கழகம்
மேலும், சென்னை போன்ற நகர்ப்புறங்களில் திராவிட முன்னேற்ற கழகம் (DMK) கட்சி பல இடங்களில் கடுமையான போட்டியை சந்திக்கக்கூடும். தமிழக வெற்றி கழகம் (TVK) உருவாக்கும் வாக்கு பிளவு, பல தொகுதிகளில் முடிவுகளை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த நிலைமைகளை ஒருங்கிணைத்து பார்க்கும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கூட்டணி அரசு அமைக்கும் ஒரு பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம்
இதே நேரத்தில், மகளிருக்கான உரிமைத் தொகை போன்ற நலத்திட்டங்கள் மூலம் திமுக தனது ஆதரவு வாக்குகளை தக்க வைத்திருக்குமானால், ஆளுங்கட்சி தொடர்வதற்கான வாய்ப்பும் இன்னொரு பரிமாணமாக உருவாகும். ஆக மொத்தத்தில், இந்த தேர்தல் 40 வயதிற்கு மேற்பட்டவர்களின் நிலையான வாக்கு போக்கும், 40 வயதிற்கு குறைவான இளம் வாக்காளர்களின் மாற்ற விருப்பமும் நேருக்கு நேர் மோதும் ஒரு அரசியல் களமாக மாறியுள்ளது. இதன் முடிவு, வருங்கால தமிழக அரசியலுக்கான தெளிவான வழிகாட்டுதலாக அமையக்கூடும்.
2026 தேர்தல்
முடிவாக, எண்ணிக்கைகள் ஒரு கதையைச் சொல்கின்றன. ஆனால் அந்தக் கதையை மாற்றுவது மக்களின் மனநிலையும், புதிய அரசியல் சக்திகளும் தான். 2026 தேர்தல், தமிழக அரசியலில் கூட்டணி காலத்தின் புதிய கட்டத்தைத் தொடங்கக்கூடிய தேர்தலாக அமைந்துள்ளது." என கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications