பொள்ளாச்சி கொடூரம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு... விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் கைதானவர்கள் மீது 5 பிரிவின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கி உள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை மயக்கி, பாலியல் தொந்தரவு செய்ததுடன், பணம் பறித்ததாக, சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ் , வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.

அதே நேரம், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகார், மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்டது தொடர்பான புகாரின் அடிப்படையில் 2 வழக்குப் பதிவுகள் செய்து சிபிஐ விசாரணையைத் தொடங்கி உள்ளது.
முன்னதாக, சிபிசிஐடி போலீசாரிடம் மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. மணிவண்ணன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே பதியப்பட்ட 4 வழக்குகள் உடன் சேர்த்து, நேற்று முன்தினம் கூடுதலாக பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் சிபிசிஐடி போலீசார், மேலும் ஓர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் மூலம், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்தநிலையில், சிபிசிஐடி போலீசார், சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் இருக்ககூடும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications