எலி மருந்து நெடியால் சென்னையில் இரு குழந்தைகள் பலி.. உங்க வீட்டில் தப்பி தவறியும் இதை செய்யாதீங்க
சென்னை: எலித் தொல்லையைச் சமாளிக்க வைக்கப்பட்ட எலி மருந்தில் இருந்து வீசிய நெடியால் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், அவர்களின் பெற்றோரும் இப்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். எலி மருந்தால் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பொதுவாகவே கொசு மற்றும் எலித் தொல்லை இருக்கும். அதைச் சமாளிக்கப் பலரும் பலவற்றை முயல்வார்கள். அப்படி சென்னையில் எலித் தொல்லையைச் சமாளிக்க மருந்து வைத்த போது மோசமான சம்பவம் நடந்துள்ளது.

தான் சென்னை குன்றத்தூரில் தான் இந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது. அங்கு எலி பிரச்சினையைச் சமாளிக்க வைத்த எலி மருந்தின் நெடி வீடு முழுக்க பரவிய நிலையில், அதில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அவர்களின் பெற்றோர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
எலி தொல்லை: சென்னை குன்றத்தூர் பகுதிக்கு அடுத்துள்ள மணஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் கிரிதரன்.. 34 வயதான இவர், அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மேலாளராக இருக்கிறார். இவருக்கும் பவித்ரா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இந்த தம்பதிக்கு விஷாலினி(6) மற்றும் சாய் சுதர்சன் (1 வயது) என இரு குழந்தைகள் உள்ளனர்.
கிரிதரன் வீட்டில் கடந்த சில காலமாகவே எலித் தொல்லை இருந்துள்ளது. கைக்குழந்தையும் வீட்டில் உள்ள நிலையில், எலி இருந்தால் பிரச்சினை என்பதால் அதைக் கொல்ல அவ்வப்போது எலி மருந்து மற்றும் எலி பேஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்துவார் என தெரிகிறது. எலி தொல்லை அதிகரித்த நிலையில், பேஸ்ட் கன்ட்ரோல் (pest controll) நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் அங்கு எலி மருந்தை வைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
எலி மருந்து நெடி: கிரிதரன் குடும்பத்தினர் ஏசி ரூமில் தூங்கிய நிலையில், அங்கு திடீரென எலி மருந்து நெடி வீசியுள்ளது. பொதுவாக ஏசி ரூம்களில் நாம் கதவு ஜன்னல்களை மூடியே இருப்போம். இதனால் எலி மருந்து நெடி வெளியே போகாமல் அதே ரூமில் அதிகரித்துள்ளது. கொஞ்ச நேரத்திலேயே எலி மருந்து நெடியைச் சுவாசித்த 4 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு: இதையடுத்து 4 பேரும் உடனடியாக அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். உடல்நிலை மோசமாக இருந்ததால் உயர் சிகிச்சைக்காக அவர்கள் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் இருவரும் கொஞ்ச நேரத்தில் உயிரிழந்தனர்.
கணவன் மற்றும் மனைவி இருவரும் ஆபத்தான நிலையில் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எலி மருந்து நெடியால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்யலாம்: எலி மருந்து உள்ளிட்டவை பொதுவாகவே அதீத வலிமையானது. அதைப் பெரியவர்கள் நாம் தொட்டால் கூட கையை முறையாகக் கழுவ வேண்டும். இல்லை என்றால் பிரச்சினை ஏற்படும். அதிலும் உங்கள் வீட்டில் குழந்தைகள் யாராவது இருந்தால் எலி மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக எலிகளைப் பிடிக்கக் கூண்டுகளைப் பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications