செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன்.. விரட்டும் அமலாக்கதுறை.. திடீரென வழக்கு இடமாற்றம்? அடுத்து என்ன
2 அமைச்சர்கள் மீதான வழக்கு தூசி தட்டி எடுக்கப்படுகிறது
சென்னை: திமுக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான புகார் வழக்குகளை அமலாக்கத்துறை லேசில் விடுவதாக இல்லை.. அதுகுறித்த ஃபைல்களை தூசி தட்டி மீண்டும் கையில் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொதுவாக, ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்குகள் போடும்.. பிறகு, வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால், முந்தைய வழக்குகள் மொத்தமாகவே நீர்த்துப்போய்விடும்.. அல்லது வலுவிழக்க செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
அதேசமயம், ஒருசில முக்கிய வழக்குகளை அமலாக்கத்துறை கையிலெடுத்து கொண்டு, எத்தனை வருடங்கள் ஆனாலும் அதுகுறித்த வழக்கை விசாரிக்கும்.. அப்படித்தான், திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்குகளை கையில் எடுத்துள்ளது.

பணப் பறிமாற்றம்
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக ஒன்றரை கோடி ரூபாய் ஏமாற்றியதாக வழக்கு பதிவானது.. ஆனால், 81 பேரிடம், தான் வாங்கிய பணத்தை அவர்களிடமே திருப்பி செலுத்தி விட்டதாக செந்தில் பாலாஜி தரப்பில் கோர்ட்டில் சொன்னது.. இந்த வாதத்தை ஏற்று கோர்ட்டும் அந்த கேஸை முடித்து வைத்தது.. ஆனால், அமலாக்கத்துறை விடவில்லை.மேலும் சட்டவிரோத பணப் பறிமாற்றத் தடைசட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. ஆக, 2 முக்கிய வழக்குகளில் செந்தில்பாலாஜி மீது நிலுவையில் உள்ளது.

அமலாக்கத்துறை
அதேபோல, அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.. இது 2001 - 2006-ல் ஜெயலலிதா தலைமையிலான அரசு இருந்த போது நடந்த சம்பவம்.. அப்போது அனிதா, கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.. வருமானத்துக்கு அதிகமாக 4.9 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்திருந்ததாக 2006-ல்ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.. இது தொடர்பாகவே அமலாக்கத்துறையும் அனிதா ராதாகிருஷ்ணனை துரத்தி வருகிறது.

சம்மன்
இதில் செந்தில்பாலாஜிக்கு மதுரை அலுவலகத்தில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.. ஆனால் இந்த விசாரணைக்கு ஆஜராவதை அவர் தவிர்த்தே வந்தார்.. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை சொல்லி வருகிறார்.. அவகாசமும் கேட்டு வருகிறார்.. இவரை போலவே லஞ்சஒழிப்பு போலீசார் சேகரித்த ஆவணங்கள் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.. அவரும் அப்போது நடந்த சட்டசபை கூட்ட தொடரை காரணம் காட்டி பங்கேற்க இயலவில்லை..

நெருக்கடி
எனினும் இந்த 2 பேர் மீதான வழக்குகளில் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.. அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு திமுக அரசு குடைச்சல் தந்து வரும் நிலையில், அமலாக்கத்துறை மூலம் திமுக அமைச்சர்களின் வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்படுவதும், அதன்மூலம் அவர்களுக்கு நெருக்கடி தந்து வருவதும், பாஜகவின் டாக்டிக்ஸ் ஆக பார்க்கப்படுகிறது.

அலுவலகம்
இந்த நிலையில் தான் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை மையமாக வைத்து நடைபெற்று வந்த இந்த இரண்டு வழக்குகளையும் சென்னை அலுவலகத்திற்கு மாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமைச்சர்கள் இருவரையும் சென்னை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அடுத்த முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications