செந்தில் பாலாஜி, ’டாஸ்மாக்’ வழக்கை விசாரித்த ED அதிகாரிகள் 2 பேர் திடீர் இடமாற்றம்? என்ன நடந்தது
சென்னை: செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர், துணை இயக்குநர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி வருமான வரித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் மண்டல வாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை மண்டலத்தின் இணை இயக்குனர் பியூஸ்குமார் யாதவ், துணை இயக்குனர் கார்த்திக் தசாரி ஆகிய 2 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வருமானவரித்துறையில் பணியாற்றி வந்த 2 பேரும் மாற்றுப் பணியாக அமலாக்கத்துறையில் பணியாற்றி வந்தனர். தற்போது அவர்கள் மீண்டும் வருமான வரித்துறைக்கே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐஆர்எஸ் அதிகாரிகளான 2 பேரும் தான் தமிழக 'டாஸ்மாக்' முறைகேடு வழக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் முறைகேடு வழக்கு, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கதிர் ஆனந்த் எம்.பி. மீது தொடரப்பட்ட வழக்கு, ஜி ஸ்கொயர் வழக்கு, அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்தும், கண்காணித்தும் வந்தனர்.
மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது வீட்டில் வைத்து இணை இயக்குனர் பியூஸ்குமார் யாதவ் தலைமையிலான அதிகாரிகள்தான் கைது செய்து இருந்தனர். தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள வழக்குகளை விசாரித்து வந்த இந்த இரண்டு அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறையில் முக்கிய அதிகாரிகளின் இந்த இடமாற்றம் பல்வேறு யூகங்களுக்கும் வித்திட்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிரான பிடியை இறுக்கும் நோக்கில் அமலாக்கத்துறை மூலம் நெருக்கடி கொடுப்பதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த சூழலில், இரண்டு அதிகாரிகளின் இடமாற்றம் கவனம் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications