ஒரே நாளில் திமுகவில் இணைந்த இரு அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்! அலேக்காக தூக்கிய மனோஜ் பாண்டியன்!
சென்னை: ஒரே நாளில் அதிமுகவை சேர்ந்த இரு முன்னாள் எம்எல்ஏக்கள், திமுகவில் இணைந்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் ஒருவர் ஓபிஎஸ் ஆதரவாளராவார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சித் தாவல்கள் நிறைய நடைபெறுகின்றன. அந்த வகையில் அதிமுகவில் இருந்து திமுக, தவெகவுக்கும், திமுகவில் இருந்து அதிமுக, தவெகவுக்கும், தவெகவில் இருந்து அதிமுக, திமுகவுக்கும் மாறி மாறி கட்சித் தாவல்கள் நடக்கின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் ஒரே நாளில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இருவர் திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புர்தினம், சிவகாசி முன்னாள் எம்எல்ஏ பாலகங்காதரன் ஆகிய இருவர்தான் திமுகவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், கடந்த 1991- 96 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பழனி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ் பக்கம் சென்றார். அது முதல் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டு வந்த நிலையில் சுப்புரத்தினம் இன்று திமுகவில் இணைந்தார். இவர் தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்பது வழக்கமான ஒன்று!
அது போல் சிவகாசி எம்எல்ஏவாக இருந்த பாலகங்காதரன் திமுகவில் இணைந்துள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இரு அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சிங்காநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்தார். அது போல் கடந்த 2024 ஆம் ஆண்டு முன்னாள் எம்எல்ஏ கலையரசன், முன்னாள் எம்பி இளங்கோவன் ஆகியோ 500 பேருடன் சென்று திமுகவில் இணைந்தனர்.
அது போல் அதிமுக முன்னாள் எம்எல்ஏவான ஜே.சி.டி பிரபாகர் தவெகவில் இணைந்துள்ளார். அது போல் 10 ஆண்டுகளாக திமுகவில் இருந்த காமராஜரின் பேத்தி மயூரி, தவெகவில் இணைந்துள்ளார். அது போல் நடிகர் வேல ராமமூர்த்தியின் மகனும் எழுத்தாளருமான வி.ஆர். ராஜ்மோகன் தவெகவில் இணைந்தார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தால், பின்னர் அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் அங்கிருந்து விலகி தவெகவில் இணைந்துவிட்டார்.
அது போல் எழில்மலையின் மூன்றாவது மகள் கேத்ரின், சீரியல் நடிகை ரஞ்சனா நாச்சியார் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்துள்ளனர். ஏற்கெனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார்.
அவர் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களுடன் பேசி அவர்களை தவெக பக்கம் கொண்டு வருகிறார். இவர்தான் ஜேசிடி பிரபாகரனை அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. பொங்கல் முடிந்ததும் நிறைய பேர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்து வருகிறார்.
அது போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவெகவுடன் கூட்டணி வைக்கிறதோ இல்லையோ, அந்த கட்சியில் இருந்து நிறைய பேர் தவெகவில் இணைவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
மேலும் ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழகமும் விரைவில் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்கிறார்கள். அது போல் காங்கிரஸ் கட்சியும் தவெகவுடன் கூட்டணிக்கு செல்லும் என்று பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. தேர்தல் வரும் வரை இது போன்ற மாற்றங்கள் நிகழும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.












Click it and Unblock the Notifications