2 நிலாவா? அதைப் பார்க்க என்ன செய்ய வேண்டும்? 150 ஆண்டுகள் கழித்துத்தான் அடுத்த சான்ஸ்!
சென்னை: பூமியின் சுற்றுப்பாதையில் தோன்ற இருக்கும் இன்னொரு நிலாவினால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? இந்த மாதிரியான நிகழ்வு ஏற்பட என்ன காரணம் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி விளக்கம் அளித்திருக்கிறார்.
நிலவை வைத்துப் பல கற்பனையான கவிதைகளைக் கவிஞர்கள் எழுதி இருக்கிறார்கள். அதை எல்லாம் மிஞ்சக் கூடிய அதி அற்புதமான ஒரு நிகழ்வை இயற்கை இப்போது ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் நிலாவின் அருகில் அதே ஜாடையில் இன்னொரு நிலா தோன்றும் என நாசா வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் உலகத்திற்குத் தெரியவந்துள்ளது. அதாவது நிலாவே டபுள் ஆக்ட்டில் தோன்ற இருக்கிறது என்று எளிமையாக இதைச் சொல்கிறார்கள். இந்த 2வது நிலவு அப்படியே தங்கிவிடுமா? இனிமேல் வானில் இரண்டு நிலாக்களை தொடர்ந்து பார்க்க முடியுமா? என பல யூகங்கள் மக்கள் மனதில் தோன்றியுள்ளது.

முதலில் இப்போது தெரியப் போவது நிலா அல்ல. அதற்கு 2024 PT5 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது ஒரு சிறுகோள். இந்தக் கோள் பூமியின் சுற்றுப்பாதையில் சில மாதங்கள் வரை காணப்படலாம். ஆனால், பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படாது. அதனால் எந்த அச்சமும் தேவை இல்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறுகோளைக் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் உள்ள சதலேன் ஹவாய் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதாவது Asteroid Terrestrial-impact Last Alert System மூலம் கண்டறியப்பட்ட இந்த சிறுகோள் 33 அடி அகலம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 31, 2023 முதல் செப்டம்பர் 9, 2025 வரை இதன் இயக்கம் தொடரும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு ஏன் இன்னொரு நிலா என்ற பெயர் வந்தது. உண்மையில் இது நிலாவைப் போல் இருக்குமா? அதைச் சாதாரணமாகக் கண்களால் காணமுடியுமா? எனப் பல கேள்விகளுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு முத்து பதிலளித்துள்ளார். அவர் இது பற்றிப் பேசும்போது, "சமீபத்தில் PT5's என்ற குறுங்கோள் ஒன்றைத் தென்னாப்பிரிக்காவில் இயக்கிவரும் வான் ஆய்வுக்கூடம் கண்டறிந்து பதிவுசெய்துள்ளது. இது 40 அடி குறுக்களவு கொண்டது இது. கிட்டத்தட்ட ஒரு பாறாங்கல் அளவுக்கு இது உள்ளது.
சூரிய வட்டம் என்பது செவ்வாய்க் கிரகத்தை தாண்டிகூட அமைந்திருக்கலாம். அந்தச் சுற்று வட்டப்பாதையில் இந்தக் குறுங்கோளானது பூமியை நெருங்கி வருவதாகக் காட்சிப் பதிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது. பூமியிலிருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில்தான் நிலா இருக்கிறது. ஆனால், இந்தக் குறுங்கோளானது 6 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தை வைத்துப் பார்க்கும் போது இன்னும் இரண்டு வாரங்களில் பூமிக்கு அருகில் வரக்கூடும். இதனால் பார்ப்பதற்கு இன்னொரு நிலா போன்று சிறு புள்ளி அளவுதான் தெரியும். அதுவும் கூட இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. தொலைநோக்கி உதவியைக் கொண்டே காணமுடியும்.
கடந்த 2023 பிப்ரவரி மாதம் இதைப்போலவே ஒருமுறை பூமியைக் குறுங்கோள் ஒன்று கடந்து சென்றுள்ளது. இது முதல்முறையல்ல. அப்போது 85 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் வந்து சென்றது. இந்த முறை 20 பங்கு அருகாமையில் வர உள்ளது. இதனால்தான் இந்தளவுக்குக் கவனத்தை ஈர்த்துள்ளது. பூமியின் பயணப்பாதையில் இது வருவதாகக் கணிக்கப்பட்டிருந்தாலும் மோதக் கூடிய வாய்ப்பு என்பது அறவே இல்லை. பூமியின் சுற்றுத் தளமும் இந்தக் குறுங்கோளின் சுற்றுப் பாதையும் வேறு வேறாக இருப்பதாகவே ஆய்வில் பதிவாகியுள்ளது.
இதைப் போன்ற பல குறுங்கோள்கள் செவ்வாய் மண்டலத்தில் சுற்றிக்கொண்டுதான் உள்ளன. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே சுற்றி வந்த ஒரு குறுங்கோளை 200 ஆண்டுகள் முன்பே கண்டுபிடித்தார்கள். இது உருளையாக இல்லாமல் உருளைக் கிழங்குபோல ஒரு கரடு முரடான தோற்றத்தில் காணப்பட்டது. அதன்பின்னர் நடந்த ஆய்வில் இதைப்போன்று பல குறுங்கோள்கள் வட்டப்பாதையில் சுற்றி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இப்போது வர உள்ள குறுங்கோளானது 2வது நிலவாக மாறும் என்று விஞ்ஞானிகள் கூறவில்லை. இது பூமியை நோக்கி வரும்போது அதன் ஈர்ப்பு விசையினால் சுண்டி வெளியே வீசப்படும். அதன்பின்னர் ஏறக்குறையை 150 ஆண்டுகள் கழித்துத்தான் மீண்டும் நெருக்கிவிடும். ஏனென்றால் அவ்வளவு தூரத்திற்கு அதனை ஈர்ப்பு விசையானது வெளியே தள்ளிவிடும்" என்கிறார்












Click it and Unblock the Notifications