சென்னை அண்ணா நகரில் ரோஸ் மில்க் கடை ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. 2 பேர் கைது.. திடுக் தகவல்
சென்னை: சென்னை அண்ணா நகரில் ரோஸ் மில்க் கடை ஊழியரை தாக்கிய விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெட்சான் மற்றும் தென்றல் ஆகிய இரண்டு பேர் திருமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் சரண் அடைந்துள்ளனர். ஊழியர் மீது தெரியாமல் இடித்ததற்கு, மேலாளர் திட்டியதால் பதிலுக்கு தாக்கியதாக கூறியுள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் கோரா புட்சீட் என்ற ரோஸ் மில்க் கடை இயங்கி வருகிறது. கடந்த நவம்பர் 11ம் தேதி இரவு 10 மணி அளவில் கடைக்கு சென்ற மர்ம நபர்கள், அங்கு அமர்ந்திருந்த மேலாளரை வெளியே வாடா என்று சொல்லி கடுமையாக தாக்கினார்கள்.. முகத்தில சரமாரியாக குத்திய அவர்கள், திரும்ப திரும்ப வெளியே வாடா என்று சொல்லி முகத்தில் ரத்தம் வரும் வரை தாக்கினார்கள்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார்.
அவர் வெளியிட்ட பதிவில், "பெட்ரோல் குண்டுகள், மது மற்றும் போதையில் பட்டப்பகலில் நடந்த கொலைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தெருக்கள், குண்டர்கள் கும்பல் அதிகரிப்பு ஆகியவை தான் தமிழகத்தில் ஊழல் திமுக அரசின் வெற்றியாகும்.
சென்னை திருமங்கலத்தில் பாதுகாப்பு பணம் தர மறுத்ததால் உணவக மேலாளரை ரவுடிகள் அடித்து உதைத்திருக்கிறர்கள். உணவக உரிமையாளரிடமிருந்து புகார் அளித்தும், அந்த தாக்குதலை நடத்தியவர்களை காவல் துறை இதுவரை கைது செய்யவில்லை என்று சொல்கிறார்கள். இது போன்ற செயல்கள் மூலம் மக்களைப் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு திமுக அரசு தள்ளி உள்ளது" இவ்வாறு அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.
அண்ணாமலை வெளியிட்ட அதே வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பாஜக மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக குற்றம்சாட்டினார். ஹோட்டல் மேலாளரைத் தாக்கிய ரவுடிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படிப்பட்ட செயல்களுக்கு எதையும் கண்டுகொள்ளாத திமுக அரசும், காவல்துறையும் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டினார். அண்ணாமலையை போல் பாஜக ஆதரவாளர்கள் பலரும் அண்ணா நகர் வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்..
இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் ரோஸ் மில்க் கடை ஊழியரை தாக்கிய விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெட்சான் மற்றும் தென்றல் ஆகிய இரண்டு பேர் திருமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஊழியர் மீது தெரியாமல் இடித்ததற்கு, மேலாளர் திட்டியதால் பதிலுக்கு தாக்கியதாக கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications