மாடு முட்டி மாணவன் பலி.. சென்னையில் சண்டை போட்ட மாடுகளை விரட்டியபோது பெயிண்டர் படுகாயம்!
சென்னை: மாடு முட்டி, நேற்று இரண்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னை அடையார் இந்திரா நகர் பகுதியில் ஒரு மாடு முட்டியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தஞ்சை மாவட்டம் வல்லம் அரசு பள்ளி மாணவன் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பல அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. சாலைகளில் மாடுகள் சண்டை போட்டு, வாகனங்களுக்கு குறுக்கே ஓடிச் சென்று விபத்துகளுக்கு காரணமாகின்றன. மாடுகள் குறுக்கே வந்ததால் விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளன.

மேலும், மாடுகள், நடந்து செல்வோரை முட்டி வீசும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு பள்ளிச் சிறுமி ஒருவரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. மாடுகளின் கால்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட சிறுமியை, இரண்டு மாடுகள் கடுமையாக தாக்கின. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாடுகள் சாலையில் சுற்றுத் திரிவதை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கு ஒன்றில், தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கால்நடை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்நிலையில் சென்னை அடையார் இந்திரா நகர் பகுதியில், பெயிண்டர் சிவகுமார் என்பவர் மாடு முட்டி காயமடைந்துள்ளார். நேற்று இரவு வீட்டின் அருகே 2 மாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது அவற்றை விரட்டும் போது ஒரு மாடு முட்டியதில் சிவகுமார் (48) படுகாயம் அடைந்துள்ளார். வலது கையில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அரசு பள்ளி மாணவன் திரண், மாடு முட்டியதில் உயிரிழந்தார். சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் 10 ஆம் வகுப்பு மாணவன் திரணை மாடு முட்டியது. இதில் படுகாயமடைந்த மாணவன், உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.















Click it and Unblock the Notifications