பெட்ரோல் போட காசு இல்லனா இப்படியா செய்யுறது.. இரண்டு இளைஞர்கள் செய்த பகீர்.. அரண்டு போன சென்னை!
சென்னை: இந்தியாவில் கொரோனா காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தற்போதுதான் ஓரளவு மீண்டு வரும் நிலையில் ஜெட் வேகத்தில் சென்று வரும் பெட்ரோல், டீசல் விலை எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.
ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை கடந்து செல்கிறது. தமிழ்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை சதம் அடித்து விட்டது.
இந்த நிலையில் பெட்ரோல் வாங்க பணம் இல்லாததால் 2 இளைஞர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்போன் பறிப்பு
சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (17). இவர் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பழைய பல்லாவரம் சுரங்கப் பாதை அருகே செல்போன் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் திடீரென மூர்த்தியை வழிமறித்தனர். தொடர்ந்து அவரை மிரட்டி அவரிடம் இருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி இந்த சம்பவம் குறித்து பல்லாவரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வழிப்பறி நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு இளைஞர்கள் மூர்த்தியை மிரட்டி செல்போனை பறித்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன.

2 பேர் கைது
அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்டது பம்மல் பசும்பொன் நகரை சேர்ந்த பாலா(எ) சாம்(19) மற்றும் பிரின்ஸ் (எ) ஆப்பிள் (21) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வீட்டில் பதுங்கியிருந்த அவர்கள் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விலையுயர்ந்த செல்போனையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

பெட்ரோல் வாங்க பணம் இல்லை
பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது ''எங்களிடம் பெட்ரோல் வாங்க பணம் இல்லை. இதனால் செல்போன் பறிப்பில் ஈடுபட்டோம்'' என்று அந்த இளைஞர்கள் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பின்னர் இருவரையும் புழல் ஜெயிலில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications