விஜய் சிஎம் ஆன முதல் நாளே.. பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட 2 இளைஞர்கள்! கிறுகிறுத்துப் போன கிருஷ்ணகிரி!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு உடல் கிடப்பதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இன்னொரு உடல் கண்டு எடுக்கப்பட்டதும் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றச்சாட்டு வைத்த தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற முதல் நாளிலேயே இரட்டை கொலை சம்பவம் நடந்திருப்பது கிருஷ்ணகிரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பூவத்தி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுகூர் என்ற பகுதியில் சாலையோரத்தில் இன்று காலை வாலிபர் ஒருவரை, உடலில் பெட்ஷீட் உள்ளிட்டவற்றை சுற்றி எடுத்துக் கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி தென்னை ஓலைகளை வைத்து எரித்து கொலை செய்துள்ளனர்.

அதேபோல் இந்த இளைஞர் எரிந்து கிடந்த சடலத்தின் அருகில் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெப்பாலம்பட்டி பகுதியில் மேலும் ஒரு இளைஞரை இதே பாணியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளனர்.
இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் கருகிய நிலையில் சடலங்கள் கிடப்பதாக அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயில் கருகி உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக கொலை செய்துள்ளனர்.
வேறு பகுதியில் கொலை செய்து அவர்களை கொண்டு வந்து இங்கு தீ வைத்து எரித்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என தொடர்ந்து தாலுக்கா போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் கிருஷ்ணகிரி டவுண் மற்றும் கிருஷ்ணகிரி தாலுகா, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளி, மகாராஜாகடை ஆகிய காவல் ஆய்வாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிக்கப்பட்டு கருகிய நிலையில் இருந்த சடலங்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர்கள் யார் என கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதோடு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக தேர்தல் வேட்டையும் நடைபெற்றது, குறிப்பாக அந்தப் பகுதிகளில் உள்ள CCTV கேமராவில் பதிவான காட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்,
மேலும் இறந்த இளைஞர்கள் இரண்டு பேரும் யாரு என்பது தெரியாத நிலை உள்ளது, ஆகையால் வெளி மாநிலங்களில் இருந்து கொன்று எடுத்து வரப்பட்டு இப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரியவைத்துள்ளதாக சந்தேகம் எழுத்துள்ளதால் கொலையாளிகளை பிடிக்க 8 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைத்து அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு கிருஷ்ணகிரி காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே இரண்டு இளைஞர்களை உயிரோடு எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications