மெகா டி.என்.பி.எஸ்.சி ஊழல்.. களையெடுத்த உதயச்சந்திரன் ஐஏஎஸ் - மு.க.ஸ்டாலின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'
சென்னை: தனது தனிச் செயலாளர்களில் முதன்மையானவராக ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரனை அப்பாயிண்ட் செய்து சபாஷ் போட வைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று (மே.7) பதவியேற்ற நிலையில், பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறம்படச் செயலாற்றிய உதயச்சந்திரன், மருத்துவப் பணிகள் கழகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகச் செயலாற்றிய உமாநாத் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொல்லியல் துறை ஆணையராக பதவி வகித்த முதன்மைச் செயலர் உதயச்சந்திரன், முதல்வரின் தனிச் செயலாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் சிறப்பாகச் செயல்பட்ட உதயச்சந்திரன் சமச்சீர் கல்விக்கு முக்கிய காரணமாக இருந்தவர். தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டதில் அங்கும் சிறப்பாகப் பணியாற்றி அனைவர் கவனத்தையும் ஈர்த்தார். 1995 பேட்ச் அதிகாரியாகப் பணியில் இணைந்தவர் உதயச்சந்திரன்.

உதயச்சந்திரன் அதகளம்
குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி செயலாளராக 2011ல் நியமிக்கப்பட்ட பிறகு அவரது அதிரடி நடவடிக்கைகள் அனைவரையும் வியக்க வைத்தது. டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பணம் கொடுப்பவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்ட சூழல் கண்டு கொதித்தெழுந்தார். டி.என்.பி.எஸ்.சி நிர்வாகிகள் பலர் பணம் பெற்றுக் கொண்டு, தேர்வில் பாஸ் செய்ய வைப்பதும், வேலை வாங்கிக் கொடுப்பது என்று மெகா ஊழல் நடைபெற்றதை உதய்ச்சந்திரன் கண்டறிந்தார். அது தொடர்பாக, அனைத்து புகார்களையும் ஆதாரங்களோடு மேலிடத்துக்கு அனுப்பினார்.

அலற வைத்த உதயச்சந்திரன்
இந்த ஊழல் புகாரில், டி.என்.பி.எஸ்.சி தலைவர் செல்லமுத்து பெயரும் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, 2012ல், தலைவர் செல்லமுத்து தனது பணியை ராஜினாமா செய்தார். அதுமட்டுமின்றி, உதவி பல் மருத்துவர் தேர்வில் தவறான வழியில் பணம் பெற முயற்சித்தது, மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு நடந்த தேர்வில் ஊழல், ஊழல் கண்காணிப்புத்துறை விசாரணைக்குத் தேவையான ஆவணங்களைத் தர மறுத்தது ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் செல்லமுத்து உள்ளிட்ட பல அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. இப்படி, டி.என்.பி.எஸ்.சி மெகா ஊழலை கண்டறிந்து, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி நிர்வாகத்தை சீர் செய்தவர் உதயச்சந்திரன். கடைசியாக நேர்காணல் அறையில் CCTV வைக்க முயற்சி செய்யும் போது அவர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்.

சீர்திருத்தம்
பிறகு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த திருமதி சபீதா IAS மாற்றப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு உதயச்சந்திரன் கொண்டுவரப்பட்டார் . அவர் வந்த பிறகு பள்ளி கல்வித்துறையில் அவரால் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதில், 10வது மற்றும் 12வது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாநிலத்திலும் பள்ளியிலும் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்களை அறிவிக்கத்தடை விதித்த இவரது உத்தரவு முக்கியம் வாய்ந்தது.

மக்கள் ஆதரவு
அதுமட்டுமின்றி, பன்னிரெண்டாம் வகுப்பில் மொத்தம் 1200 மதிப்பெண்கள் என்றிருந்ததை 600 ஆக குறைத்ததோடு, +1 மற்றும் +2 இரண்டிற்கும் பொதுத்தேர்வு.புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு "புதுமைப் பள்ளி" விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும் . 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும். 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும். 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும் போன்ற இவரது பல சீர்திருத்தங்கள் வரவேற்பு பெற்றன.

உலகத் தலைவர் இல்லை
ஆனால், ஒருக்கட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை உதயச்சந்திரன் கேட்பதில்லை என்று பல புகார்கள் எழ, அவர் பள்ளிக் கல்வித்துறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து அப்போது அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடம், 'திறம்பட செயல்பட்ட உதயச்சந்திரன் ஏன் திடீரென மாற்றினீர்கள்?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, "உதயச்சந்திரன் ஒன்றும் பெரிய உலகத் தலைவர் இல்லை. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை, ஒரு துறையின் செயலாளரை, எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். அதில் ஒன்றும் தவறில்லை. உதயச்சந்திரன் ஒன்றும் உலகத் தலைவர் இல்லையே" என்றார் சூடாக. இப்படி நேர்மையான அதிகாரியாக தன் பயணத்தை இன்று வரை தொடரும் உதயச்சந்திரனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களில் முதன்மையானவர் எனும் மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கும் தனது நேர்மை வழியில் பயணிக்க புத்துணர்ச்சியுடன் தயாராக உள்ளார் உதயச்சந்திரன்.












Click it and Unblock the Notifications