முதலமைச்சர் கோப்பை 2023! விளையாட வாங்கன்னு ஒரு வார்த்தை தான் சொன்னோம்! உதயநிதி உற்சாகம்!
சென்னை: எப்படி கல்வியை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பயிலலாமோ, அதைப்போல, விளையாட்டும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உற்சாகமாக பேசியுள்ளார்.
முதலமைச்சர் கோப்பை 2023 தொடக்க விழாவில் பேசிய அவர், இந்தியாவிலேயே நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அந்த விழாவில் பேசியதாவது;

விளையாட வாருங்கள் என்று ஒரு வார்த்தை தான் கூறினோம். இத்தனை லட்சம் வீரர் - வீராங்கனைகள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளீர்கள். இதற்கு காரணம் உங்கள் திறமை மீதும், நம்முடைய அரசின் மீதும் நீங்கள் வைத்திருக்கிற நம்பிக்கை தான். முக்கியமாக இந்தப் போட்டிகள், நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய பெயரில் நடைபெறுகிறது.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எப்படியான நிர்வாகத்திறனை பெற்றவர் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். அவர்களுடைய பெயரில் நடைபெறுகின்ற இந்தப் போட்டிகள், மிகச்சரியாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு வருகின்றன என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
விளையாட்டு என்பது இந்த வயதினருக்குத்தான் - அந்த வயதினருக்குத்தான் - இவர்கள் மட்டும் தான் விளையாட வேண்டும் என்ற ஒரு விஷயம் கிடையாது.
எப்படி கல்வியை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பயிலலாமோ. அதைப்போல, விளையாட்டும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம். எனவே தான் பள்ளி , கல்லூரி மாணவ - மாணவியர், அரசு ஊழியர்கள் , பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என இந்தப்போட்டிகள் எல்லோரையும் உள்ளடக்கி நடத்தப்பட்டன.
முன்பெல்லாம் விளையாட்டு போட்டிகள் என்றால் மாணவர்கள் தயாராவார்கள். ஆசிரியர்கள் அவர்களுக்கு துணை நிற்பார்கள். இன்றைக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் என இருவரும் மைதானத்திற்கு சென்று முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்காக பயிற்சி மேற்கொண்டார்கள் என்பது சிறப்புக்குரிய மாற்றமாகும்.
இன்னொருபுறம் அரசு ஊழியர்களும் அதிகளவில் பங்கேற்றுள்ளீர்கள். கோப்புகள் ஆய்வு வேலை என்றிருந்த உங்களின் விளையாட்டு திறமைக்கு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் களம் அமைத்து கொடுத்திருக்கின்றன. மாற்றுத்திறனாளி சகோதரி - சகோதரர்களும் நிறைய கலந்து கொண்டிருக்கிறீர்கள். மற்ற வீரர் - வீராங்கனையருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்போமோ அதைவிட ஒருபடி அதிகமாகவே, உங்களுக்கு நம்முடைய கழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
விளையாட்டுப் போட்டிகள் என்பவை நகரங்களுக்கானவை மட்டுமல்ல. கிராமங்களிலும் ஏராளமான திறமைசாலிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு சரியான வாய்ப்பும், வழிகாட்டுவதற்கு உரிய வசதிகளும் இல்லை. அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரம் ஊராட்சிகளில் ஒன்று கூட விடுபட்டுவிடக்கூடாது என்று இந்தப்போட்டிகளை நடத்தினோம்.
இந்தியாவிலேயே நம்பர் 1 கல்வியாளர்களை, நம்பர் 1 மருத்துவர்களை, நம்பர் 1 விஞ்ஞானிகளை, நம்பர் 1 வழக்கறிஞர்களை தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. இன்னும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கென தனி அமைச்சகத்தை 2006 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள்.

கல்வித்துறையுடன் இருந்த விளையாட்டுத்துறையை தனியாக பிரித்தது மட்டுமல்லாமல், விளையாட்டுக்கான கல்வியைத்தர வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற் கல்வியியல் பல்கலைக்கழகத்தை தொடங்கியதும் கலைஞர் தான். அந்த அளவிற்கு கலைஞர் அவர்களுக்கு விளையாட்டுத்துறையின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. உங்களுக்கெல்லாம் தெரியும், கிரிக்கெட் மீது கலைஞருக்கு தனிப்பிரியம் உண்டு.
கலைஞர் அவர்களோடும் - நம் முதலமைச்சர் அவர்களோடும், கிரிக்கெட் விளையாடுகிற வாய்ப்பை பெற்ற நான், இன்றைக்கு விளையாட்டுத்துறைக்கே அமைச்சராக செயலாற்றுவதால், கலைஞர் அவர்களும், நம் முதலமைச்சர் அவர்களும் விளையாட்டுத்துறையில் எத்தகைய மாற்றங்களை கொண்டு வர நினைத்தார்கள் என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகிறோம்.
ஒரு துறையை நோக்கி பல லட்சம் பேர் கனவுகளோடும், தங்களின் திறமைக்கான அங்கீகாரம் வேண்டும் என்றும் உற்று நோக்குகிறார்கள் என்றால் அது விளையாட்டுத்துறை தான்.அதனால் தான் இதனை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக லட்சக்கணக்கான விளையாட்டு வீரர்களின் கனவு - லட்சியத்தை சுமக்கின்ற - அந்த கனவை நினைவாக்கித் தருகிற துறையாக தான் நம் துறை உள்ளது. எனவே, நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.












Click it and Unblock the Notifications