அடடா! உதயநிதி கிளிசரின் எடுத்துட்டு போகாம போயிட்டாரே.. ஒரு சொட்டு கூட கண்ணீர் வரலை! மாஜி கிண்டல்
சென்னை: கண்களில் தண்ணீர் வராமலேயே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழுகிறார், இதெல்லாம் நாடகம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி தமிழக அரசியலில் முக்கியமான சம்பவங்கள் நடந்தன. அந்த நாளில் அதிமுக மாநாடு மதுரையில் நடந்தது. அதுபோல் நீட் தேர்வை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டமும் நடந்தது.

சென்னை ராஜ்பவனில் நடந்த எண்ணித் துணிக நிகழ்ச்சியில் நீட் தேர்வில் 600 க்கு மேல் மதிப்பெண்களை பெற்ற மாணவர்களையும் அவரது பெற்றோரையும் ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார்.
அப்போது சேலத்தை சேர்ந்த அம்மாசியப்பன் என்பவர் தமிழத்திற்கு நீட் தேர்விலிருந்து எப்போது விலக்கு அளிக்கப்படும். நீட் தேர்வு பயிற்சிக்காக பெற்றோர் நிறைய செலவிட வேண்டியதிருக்கிறது என்றார். அதற்கு ஆளுநர் பதிலளிக்கையில் அதற்கு ஆளுநரோ நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கொடுக்க முடியாது. நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்தால் தமிழகத்தில் மாணவர்கள் போட்டியிடும் திறனை இழந்துவிடுவார்கள். இது மாணவர்களுக்கு செய்யும் அநீதியாக மாறிவிடும்.
எனவே நீட் தேர்விலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்க முடியாது என்றார். அதற்கு அம்மாசியப்பன் நீட் தேர்வுக்கு முன்னரே தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளும் மருத்துவர்களும் சிறப்பாகத்தானே செயல்பட்டார்கள் என கேள்வி எழுப்பினார். அதை ஆளுநர் மறுத்த நிலையில் அவரை உட்காருங்கள் என கூறிவிட்டார். ஆளுநர் மாளிகை அதிகாரிகளும் அவரிடம் இருந்து மைக்கை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் மருத்துவ சேர்க்கைக்கு இடம் கிடைக்காததால் சென்னை சிட்லப்பாக்கத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தூக்கிட்டு கொண்டார். அவரது இறப்பை தாங்க முடியாததால் அவருடைய தந்தையும் அடுத்த நாளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி திமுக இளைஞர் ரணி, மருத்துவரணி, மாணவரணி சார்பில் தமிழகத்தில் மதுரையை தவிர மற்ற தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா சுப்பிரமணின், உதயநிதி, எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் அனிதாவின் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அதை பார்த்த உதயநிதி ஸ்டாலின் கண் கலங்கிய வீடியோ காட்சிகள் வைரலாகின. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாநாட்டிற்கு போலீஸார் உரிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் மனு அளித்தார் ஜெயக்குமார்.
இதைத் தொடர்ந்து ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மதுரை மாநாட்டிற்கு 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை வருகை தந்தனர். இது சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொரிக்கப்பட வேண்டிய மாநாடு. இந்த மாநாட்டை விட இன்னும் சிறப்பான மாநாட்டை நடத்த முடியும் என சொன்னால் அதை அதிமுகதான் செய்து முடிக்கும்.
திமுகவினர் இப்போது மட்டுமல்ல முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்தே அதிமுகவின் வளர்ச்சியை எழுச்சியை மக்கள் செல்வாக்கை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள். தொண்டர்கள் மதுரைக்கு வரக் கூடாது என்பதற்காக ஆளும் கட்சி பல முட்டுக்கட்டைகள் போட்டன. ஆனால் அதையெல்லாம் மீறி 40 ஆயிரம் வாகனங்கள் மதுரையை நோக்கி படையெடுத்தன.
மதுரை மாநாட்டிற்கு 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை கூடுவர் என மே மாதம் 31 ஆம் தேதியே திருமங்கலம் டிஎஸ்பிக்கு தகவல் கொடுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. போக்குவரத்தையும் சரி செய்யவில்லை. தொண்டர்களுக்கு உணவு இல்லை என சொல்லக் கூடாது என்பதற்காகவே முதலிலேயே உணவு தயாரிக்கப்பட்டது. உணவு வீணானது குறையாகிவிட்டது. இனி வருங்காலத்தில் இந்த குறை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் அழிக்கப்பட்ட போது திமுக முதலை கண்ணீர் வடித்தது. உதயநிதி மகா நடிகர். ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கு உதயநிதி கிளிசரின் கொண்டு போகவில்லை போல! கையில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு அழுவதா.. 2024 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என திமுக நாடகத்தை நடத்துகிறது என ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications