சனாதனம் மேட்டரை அண்ணாமலை அரசியலாக்குகிறார்.. ஆதாரம் எங்க சார்? ஐகோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் வாதம்!
சென்னை: சனாதன விவகாரத்தை அரசியலாக்குகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதம் வைத்துள்ளது.

தமுஎகச சார்பில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியம். சனாதனம் சமத்துவதற்கும் சமூகநீதிக்கும் எதிரானது. " எனப் பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த இந்தப் பேச்சு, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியது. நாடு முழுவதுமுள்ள பாஜகவினரும், இந்துத்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் கொந்தளித்தனர். உ.பி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா, உதயநிதியின் தலைக்கு ரூ. 10 கோடி விலை வைத்தார். சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலைத்தில் புகார்கள், நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ப்பட்டன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்து விமர்சித்து பேசியுள்ளார். அப்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேடையில் இருக்கிறார். ஒரு மதத்தை பற்றி இழிவாக பேசிவிட்டு எப்படி அமைச்சராக தொடர முடியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் தொடர்பான பேச்சு பற்றிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், சனாதன விவகாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுமென்றே அரசியலாக்குகிறார். சனாதன விவகாரத்தை வைத்து பாஜகவினர் ட்விட்டரில் தனி விசாரணையை நடத்துகின்றனர் எனத் தெரிவித்தார்.
மேலும், சனாதன பேச்சு தொடர்பாக ஆதாரங்களை சமர்பிக்காததால் கோ வாரண்டோ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஆதாரங்களை கேட்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது, மனுதாரர்கள் தான் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.

எனவே, ஆதாரங்களை சமர்பிக்காவிடில் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் வில்சன் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications