“எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு”.. அண்ணா நகரில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: சென்னை அண்ணா நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் சிற்றரசுவை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் தமிழக துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். அப்போது, அண்ணா நகர் தொகுதிக்கு திமுக கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின்.
சட்டசபை தேர்தலில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் திமுக சார்பில் சிற்றரசு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தவெக வேட்பாளர் ராம் குமார், நாதக வேட்பாளர் சங்கர் ஆகியோர் களத்தில் உள்ளனர். உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான சிற்றரசு, பிரச்சாரக் களத்தில் சுற்றிச் சுழல்கிறார். இந்நிலையில் இன்று அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "திமுக வேட்பாளர் சிற்றரசுவை பற்றி உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நான் இளைஞரணி செயலாளர். சிற்றரசு, இளைஞரணியில் பயிற்சி பெற்று தற்போது மாவட்டக் கழகச் செயலாளராக இருக்கிறார். உங்களின் ஆதரவோடு விரைவில் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருக்கிறார்.
எனது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கும் மாவட்ட செயலாளர் சிற்றரசு தான். எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கலைஞர் கருணாநிதி நின்று வெற்றி பெற்ற சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ நான். சிற்றரசு, கலைஞர் கருணாநிதி நின்று வெற்றி பெற்ற அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு விரைவில் சட்டமன்ற உறுப்பினராகப் போகிறார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பல விஷயங்களில் ஒரு ரோல் மாடல் தொகுதியாக இருந்து வருகிறது. அண்ணா நகர் தொகுதியையும் அப்படியான ரோல் மாடல் தொகுதியாக மாற்றுவார் சிற்றரசு. அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அணுப்ப வேண்டும். கடந்த முறை 28 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் எம்.கே.மோகனை வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிற்றரசுவை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் செய்து கொடுத்தவற்றில் சில திட்டங்களை இங்கே நினைவுகூர்கிறேன். அண்ணா நகர் டவர் புனரமைக்கப்பட்டுள்ளது. முழுநேர கிளை நூலகம் திறக்கப்பட்டுள்ளது. ஷெனாய் நகரில் பேட்மிண்டன், ஜிம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயித்தவுடன் என்னென்ன செய்வோம் என திமுக தலைவர் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை இனி 2000 ரூபாயாக வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூபாய் 8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். அதை பயன்படுத்தி நீங்கள் வீட்டுக்குத் தேவையான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, கிரைண்டர், மிக்சி என எதனை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications