உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லத்தில் குவிந்த துரைமுருகன் உள்ளிட்ட திமுக "தலைகள்” என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்ற திமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தான் இப்போது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்த போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலம் தாழ்த்தியே ஓராண்டுக்குப் பின்னர் உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லும் போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுகிறார் என்கிற பேச்சு எழுந்தது. இது பற்றி உதயநிதி ஸ்டாலினிடமே செய்தியாளர்கள் கேட்ட போது, அனைத்து அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாக இருப்பவர்கள்தான் என தாத்தா கருணாநிதி பாணியில் பதிலளித்திருந்தார். அவரது இந்த சிலேடையான பேட்டியும் வெகுவாக ரசிக்கப்பட்டது.

துணை முதல்வர் பதவி: திமுகவில் தற்போதைய தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், படிப்படியாக உயர் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். திமுகவில் செயல் தலைவர், துணை முதல்வர் என பொறுப்புகளுக்கு பின்னரே முதல்வரானார். முன்னதாக அமைச்சர் பதவியும் நீண்டகாலத்துக்குப் பின்னரே வழங்கப்பட்டது. இந்த பாணியில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் பதவியைத் தொடர்ந்து துணை முதல்வர் பதவியும் தரப்படும் என்கிற பேச்சுகள் எழுந்தன. ஆனால் முதல்வர் ஸ்டாலின், இந்த பேச்சுகளுக்கு ஆணித்தரமான முற்றுப்புள்ளி வைத்தார்.
திமுகவில் அடுத்த பதவியா?: இதனைத் தொடர்ந்து சேலத்தில் திமுக இளைஞரணி 2-வது மாநாட்டை மிகப் பிரம்மாண்டமாக நடத்தி காட்டினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் முப்பெரும் விழா மாநாட்டை விட படு பிரம்மாண்டமாக நடத்தி அசத்தினார் உதயநிதி. இதனைத் தொடர்ந்து உதயநிதிக்கு அடுத்து என்ன புரமோஷன் என்கிற பேச்சும் இப்போதும் திமுகவில் இருந்து வருகிறது. ஆட்சியில்தான் துணை முதல்வர் பதவி இப்போதைக்கு இல்லை என்றாகிவிட்டது; இளைஞரணியை வலிமையாக்கி விஸ்வரூபமாக்கிவிட்டார்; இதற்கு அடுத்ததாக திமுகவின் உயர் பதவிக்கு உதயநிதியை கொண்டுவரலாமே என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் பேச்சு. ஆனால் அப்படி எல்லாம் ஒரே அடியாக திமுகவில் உச்ச பதவிகளில் உதயநிதி உட்கார வைக்கப்படுவாரா? என்கிற கேள்வியும் இன்னொரு பக்கம் எழுப்பப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு குறிஞ்சி இல்லம்! சபாநாயகர் அப்பாவுவுக்கு மலரகம் இல்லம்! ஜரூராக நடக்கும் வேலை!
ஏன் குறிஞ்சி இல்லம்?: இந்த தருணத்தில்தான் சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லத்தில் -அரசு பங்களாவில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலரும் ஒன்று திரண்டிருந்தனர். சேலம் மாநாட்டுக்கு உழைத்தவர்களுக்கு பாராட்டு என்பதற்காக குறிஞ்சி இல்லத்தில் திமுக தலைவர்கள் ஒருசேர குவிந்திருந்தனர். இதுவரை அண்ணா அறிவாலயத்தில்தான் அல்லது அன்பகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் குறிஞ்சி இல்லத்தில் இப்படியான ஒரு கூட்டம் கூட்டப்பட்டது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
துரைமுருகன் பேச்சு: அத்துடன் இந்த கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், குறிஞ்சி இல்லத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக புதுப்பித்து விரிவாக்கம் செய்ததாகவும் அதனை கருணாநிதி ஏற்க மறுத்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இதேபோல பேசிய இதர திமுக தலைவர்களும் உதயநிதிக்கு கட்சியில் அடுத்த உயர் பதவி கிடைக்கும்; கிடைக்க வேண்டும் என பொடி வைத்தாற் போல பேசி சென்றதுதான் அரசியல் வட்டாரங்களில் முதன்மையான விவாதப் பொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications