உங்களுக்கு சுப்ரீம் கோர்ட் டெல்லின்னா.. எங்களுக்கு கருணாநிதிதான்.. நாங்கள் இப்படித்தான்!.. உதயநிதி
சென்னை: நாங்கள் 3ஆம் பாலினத்தவர்கள் என அழைக்க மாட்டோம். எங்கள் சுப்ரீம் கோர்ட் கருணாநிதி சொன்னது போல் திருநங்கையர் என்றே அழைப்போம் என சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தி நகர் பிட்டி தியாகராயஅரங்கில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கபட்டது. நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர் பாபு, சென்னை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

சேப்பாக்கம் தொகுதி
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதய நிதி ஸ்டாலின் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில் சேப்பாக்கம் தொகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு 100 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து வற்புறுத்தி இந்த அடையாள அட்டை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை
திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்க கூடிய நிகழ்வு கடந்த 4 ஆண்டுகளில் ஒரு நிகழ்வு கூட நடைபெறவில்லை. இதுதான் முதல் நிகழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சி இனி தொடர்ச்சியாக நடைபெறும். எங்கள் சட்டமன்ற அலுவலகத்தின் கதவுகள் என்றும் தங்களுக்கு உதவி செய்யவதற்க்காக திறந்தே இருக்கும்.

நெஞ்சார்ந்த நன்றி
திருநங்கைகளுக்கு எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதனை தீர்ப்பதற்காகவே எங்களுடைய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். அடையாள அட்டை வழங்குவதற்கு உருதுணையாக செயல்பட்ட அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருநங்கை
இந்தியாவிலேயே திருநங்கைகள் என பெயரிட்டு அழைத்தவர் கருணாநிதி. ஆனால் இங்கு இதற்கு முன்பு பேசிய அரசு அதிகாரிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அழைத்தார்கள். நான் உடனே அவர்களிடம் ஏன் அவ்வாறு அழைக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அதிகாரிகள் மூன்றாம் பாலினத்தவர்கள் என அழைக்க சொன்னது சுப்ரீம் கோர்ட். அதனால் அவ்வாறு அழைக்கிறோம் என்றார்கள்.

கருணாநிதி
உங்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஓகே, எங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கருணாநிதிதான். எனவே அவர் சொன்னபடி திருநங்கையர் என்றுதான் நாங்கள் அழைப்போம் என கூறிவிட்டேன் என்றார் உதயநிதி. நிகழ்ச்சியின் இறுதியாக திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மற்றும் நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications