இது பெரியார் மண்.. பாஜக வேலைகள் எல்லாம் இங்கே பலிக்காது பார்த்துக்கோங்க.. உதயநிதி ஸ்டாலின் நறுக்
சென்னை: இது பெரியார் பூமி, இங்கு பாஜகாவின் வேலைகள் பலிக்காது என்று உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
Recommended Video
சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை ராயப்பேட்டை நியூ காலேஜ் ஆடிட்டோரியத்தில் திருவல்லிக்கேணி இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் ரமலான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செஞ்சி மஸ்தான், மத்திய சென்னை எம்பி தயாநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஆன உறவு கழகம் தோன்றிய காலத்திலிருந்து உள்ளது. 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள், அரசியலை தாண்டிய ஒரு கொள்கை உறவு.

கருணாநிதி
1989 ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான ஆட்சியின் போது சிறுபான்மையினருக்கான தனி ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் 2007ஆம் ஆண்டு 3.5 சதவீதம் இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பிரம்மாண்ட பேரணி நடத்தி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான மத்திய அரசு
மத்திய அரசு பல மாநிலங்களில் இஸ்லாமியருக்கு எதிராக தூண்டி வருகிறது. டெல்லியில் அசைவம் சாப்பிடக் கூடாது என மாணவர்கள் தாக்கப்பட்டனர். இஸ்லாமியர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை கூட மத்திய அரசு தீர்மானிக்க நினைக்கிறது. அது போல் எந்த உடை அணிய வேண்டும் என்பதிலும் மத்திய அரசு தலையிடுகிறது.

பெரியார் மண்
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி வழியில் நமது முதல்வர் நல்லாட்சி நடத்தி வருகிறார். மத ஒற்றுமைக்காக பாடுபடுவோம். இளைஞரணி செயலாளராக இருந்த நான் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய போது கைதானேன். இது பெரியார் பூமி, இங்கு பாஜகவின் வேலைகள் எல்லாம் பலிக்காது என்றார் உதயநிதி.












Click it and Unblock the Notifications