சாம்பியன் கேகேஆர்..இன்பநிதி யார் பக்கம்? ஹைதராபாத்தை சிதற வைத்த கொல்கத்தா! கப்பை ஜெயித்த கம்பீர்!
சென்னை: சுமார் இரண்டு மாதங்களாக இந்தியா முழுவதும் பேசு பொருளாக இருந்த ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி கொல்கத்தா வீரர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் மிகவும் பிரபல்யமான கிரிக்கெட் தொடராக ஐபிஎல் இருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டித் தருவதால் வெளிநாட்டு வீரர்கள் பலரும் ஐபிஎல்-ல் விளையாடி வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் ஏராளமான இளைஞர்கள் ஐபிஎல்-ஐ தங்கள் துருப்புச் சீட்டாக பயன்படுத்தி திறமையை நிரூபித்து இந்திய அணிக்கு இடம் பிடிக்கின்றனர்.
2024 ஐபிஎல் சீசன்: இந்த நிலையில் 2024 ஐபிஎல் சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெளியேறிய நிலையில் இறுதி போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் முன்னேறின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் வெளியேறினர்.

இறுதிப் போட்டி: இதையடுத்து முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெறும் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா களம் இறங்கி நிலையில் ரஹ்மானுல்லா குர்பாஸ் - சுனில் நரைன் முதலில் களமிறங்கினர். வெறும் 6 ரன்களில் சுனில் நரைன் வெளியேறிய நிலையில் அதற்கு பிறகு வெங்கடேஷ் ஐயர் குர்பாஸ் இணைந்து ரன்களை குவித்தனர். வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி பவர் பிளேவின் முடிவில் 72 ரன்களை எடுக்க வைத்தார்.
கேகேஆர் சாம்பியன்: ரஹ்மானுல்லா குர்பாஸ் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில் வெறும் 10.3 ஓவர்களிலேயே கொல்கத்தா இலக்கை எட்டி சாம்பியன் கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது. 2012 மற்றும் 2014 அந்த அணி தொடரை கைப்பற்றிய நிலையில் இந்த முறை மூன்றாவதாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

இன்பநிதி: இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் உடல்நிலை சரியில்லாத போதும் மாஸ்க் அணிந்தபடி வந்து கலந்து கொண்டார். தொடர்ந்து கொண்டாட்டங்களுக்கு பிறகு கோப்பையை வாங்கிய கொல்கத்தா வீரர்கள் மகிழ்ச்சியில் ஊறித் திளைத்தனர். இந்த நிலையில் இந்த போட்டியை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் பேரனும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி நேரில் கண்டு ரசித்தார்.
போட்டோ எடுத்து உற்சாகம்: ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் இன்பநிதி நேரில் பங்கேற்று பார்த்து ரசித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி முடிவடைந்ததும் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுடன் இன்பநிதி புகைப்படம் எடுத்துக் கொண்டார் அதை தொடர்ந்து தங்கள் கையெழுத்திட்ட டி-ஷர்ட்களை இன்பநிதிக்கு வீரர்கள் வழங்கினர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications