மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர்
சென்னை: சட்டமன்ற தேர்தல் தோல்வி தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுக தோல்வியடைந்தது. தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியும் உடைந்துவிட்டது. இதனால் அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்காமல் ஸ்டாலின், உதயநிதி அலட்சியமாக இருப்பதாக திமுகவினர் கூறுகின்றனர். சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதை இருவரும் காது கொடுத்தே கேட்கவில்லையாம்.
சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்வதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வுக்குழு நியமித்தார். அந்தக் குழு தமிழகம் முழுவதும் பயணித்து மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக தோல்வி குறித்து நேரடியாக சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. உள்கட்சி பஞ்சாயத்து, வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் பின்னணி, கடைசி நேரத்தில் பணத்தை சுருட்டியது குறித்து தகவல் வெளியாகி வருகிறது.

திமுக அலட்சியம்
திமுக கள ஆய்வு தொடர்பாக செய்தி தொடர்பாளர்கள் 23 பேருடன் அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் உதயநிதியும் பங்கேற்றார். இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், "திமுக ஆட்சியில் கட்சிக்காரர்கள் யாரையும் ஸ்டாலின், உதயநிதி சந்திக்கவில்லை. ஸ்டாலின் அறிவாலயம் வருவதே அரிது. உதயநிதியை குறிப்பிட்ட சிலரை தாண்டி மற்றவர்கள் உதயநிதியை சந்திக்க முடியவில்லை. கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தான் ஸ்டாலின், உதயநிதி அருகில் இருந்தனர்.
தேர்தல் தோல்விக்கு பிறகு செய்தி தொடர்பாளர்களை அழைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாங்களும் மனம் விட்டு பேசலாம், ஸ்டாலினும் மனம் விட்டு பேசுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தலைவர் மனதில் இருந்து உடைத்து எதையும் ஸ்டாலின் பேசவில்லை. தனக்கு எழுதிக் கொடுத்ததை மட்டுமே அவர் சம்பிரதாயமாக பேசினார். இதில் நாங்கள் அதிருப்தியடைந்தோம். கொள்கை தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்று தான் அழைப்பு விடப்பட்டது.
நிர்வாகிகள் வேதனை
செய்தித் தொடர்பாளர்கள் பேசியதையும் ஸ்டாலின், உதயநிதி இருவரும் காது கொடுத்து கேட்கவில்லை. கடைசியில் தோல்வி குறித்த ஆலோசனையும் கண் துடைப்பு கூட்டமாகவே இருந்தது. திமுகவின் பலமே கள அரசியல் தான். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதற்கு உதயநிதி, விஜய் கள அரசியல் செய்து தான் முதலமைச்சரானாரா. பிரச்சனைகள் சார்ந்து அரசியல் செய்தால் போதும் என்று கூறிவிட்டார்.
நிர்வாகிகள் சொன்ன கருத்துகளை புறம்தள்ளினார்கள். ஊடகங்களை கையாள்வதில் கோட்டை விட்டுள்ளோம் என சொல்லி, ஊடகங்களை எப்படி கையாள்வது என்று ஆலோசனை நடத்தப்பட்டது. உண்மையில் மக்களை கவர்ந்தால் போதும். பென் நிறுவனம் கடந்த காலங்களில் ஊடகங்களை கையாண்டதில் சொதப்பிவிட்டனர். கடந்த கால தவறுகளில் பாடம் கற்காமல் மீண்டும் அதே தவறுகளை செய்கறிர்கள்.
அதே தவறு
ஊடக ஒருங்கிணைப்பு தொடர்பாக பரந்தாமன், அபிசுல்லா, சூர்யா கிருஷ்ணமூர்த்தி அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதற்காக இப்போது வரை ஒரு வாட்ஸ் அப் குழு கூட இன்னும் அமைக்கவில்லை. தவறுகளில் பாடம் கற்காமல், கடந்த காலங்களில் யார் என்ன பொறுப்பை கவனித்தார்களோ, அதே நபர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது. பிறகு எப்படி திமுக வெற்றி பாதைக்கு திரும்ப முடியும்" என்றனர் சோகமாக.












Click it and Unblock the Notifications