சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டி.. உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு.. எதிர்க்கபோவது "அவரா?"
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், அக்கட்சி இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
திரைப்பட நடிகராக அறியப்பட்ட உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி செயலாளராக அரசியலில் காலடி எடுத்து வைத்தார். இப்போது அடுத்தகட்டமாக தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ளார், உதயநிதி ஸ்டாலின்.
ஆம்.. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார், உதயநிதி ஸ்டாலின். அந்த வகையில் அவரது அரசியல் கிராப் கிடுகிடுவென வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறது.
தந்தையை போலவே உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் எங்கு போட்டியிட விரும்புகிறாரோ அங்கு அவருக்கு சீட் கிடைத்துவிடும் என்பதுதான் திமுகவினர் கருத்தாக இருக்கிறது. எனவே தனது தந்தையை போலவே, சென்னையை தனக்கான தேர்தல் களமாக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுத்துள்ளார்.
பிரச்சார பயணம்
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக கூட்டணி இந்த தேர்தலில் தேனி தவிர்த்த அனைத்து தொகுதிகளிலும் வென்றது. வெற்றிக்கான காரணங்கள் பல இருந்தாலும், குறிப்பிடத்தக்க கிரெடிட் உதயநிதி ஸ்டாலின் கைக்கு போய் சேர்ந்தது. இதை காரணமாச் சொல்லி, திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
திமுகவின் பலமான தொகுதி
இந்த நிலையில், சட்டசபைத் தேர்தலுக்காக உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். டிசம்பர் மாதத்திலிருந்தே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார், உதயநிதி ஸ்டாலின். திமுக கோட்டையாக கருதப்படும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில்தான் அவர் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளிவந்தன.
ஜெ.அன்பழகன் தொகுதி
இந்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுவை உதயநிதி ஸ்டாலின் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனாவால் காலமானார். எனவே அந்த தொகுதி காலியாக உள்ளது. அன்பழகன் மகன் அங்கே போட்டியிடுவாரா அல்லது உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது.
|
உதயநிதி ஸ்டாலின் vs குஷ்பு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் களமிறங்கினால், பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்த தொகுதி மீண்டும் விஐபி அந்தஸ்தை பெற்றுள்ளது என்று சொல்லலாம்.