பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசுப் பணி! நேரில் ஆணை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலக உதவியாளர் பணி வழங்கியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலினிடம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சில நாட்களுக்கு முன்னர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி பாப்பாத்தி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் முதுகலை தமிழ் பட்டாதாரி ஆவார்.

இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பாரா விளையாட்டுப் போட்டிகளில் பார்வையற்றோருக்கான பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த பாப்பாத்தி, தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதாகவும், தாம் முதுநிலை பட்ட மேற்படிப்பு படித்துள்ளதாகவும் தெரிவித்து தனது குடும்ப நிலையைக் கருத்திற் கொண்டு தனக்கு ஏதாவது வேலை வாய்ப்பு வழங்கிடுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
செல்வி பாப்பாத்தியின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அந்த பார்வையற்ற பெண்ணுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணிநியமனம் வழங்கிட ஆணையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இன்று (10.05.2023) தலைமைச் செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செல்வி பாப்பாத்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான ஆணையினை வழங்கினார்.












Click it and Unblock the Notifications